'மே' ய்க்கு(ம்) கவிதை - அ.வாசுதேவா

'மே' ய்க்கு(ம்) கவிதை - அ.வாசுதேவா
 
 

பார் உயரப் பாடுபடு வோர்கள்
பணமுதலைப் பெரியர்களின் வேர்கள்
தார் தொடுத்துத் தக்கபடி
சூட்டுதற்கு எவருமில்லை
ஊர் பவனி கொள்ளும் நூறு கார்கள்
 

சம்பளத்தைக் கூட்டித்தரக்  கேட்டார்
சாம் வரைக்கும் தம் உழைப்பைப் போட்டார்
அம்பலத்துத் தோட்டமதில்
அரை உயிரை விட்ட பின்பு
ஐம்பதினை கூட்டினின்றார்  ஓட்டார்

அட்டைக்கடிக் கொடுமைகளில் செத்தார்
ஆயுளெல்லாம் உழைப்பினிற்கே வித்தார்
பெட்டை பெடி பெரியர் என்று
பெண்களொடு ஆண்களுமே
சட்டைத் துணி கூட இன்றிச் செத்தார்

பிள்ளை குட்டியோடு தாயும் சேர்ந்து
பிடுங்கிச் சேர்க்கும் கொழுந்துக் கூடை சார்ந்து
கொள்ளை செய்யும் கங்காணி
கொழுந்து நிறை பார்க்கிறப்போ
தள்ளி வைப்பான் தன் கணக்கைத் தேர்ந்து

வாழ்விடங்கள் போதியதாய் இல்லை
வந்தவர்கள் தங்க இடம் தொல்லை
பாழ்வறுமைச் சுமை அகற்ற
பட்டினியோடேகும் அவர்
தாழ்வகல யார்தொடுப்பார் வில்லை
                                    ◉◉◉
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.