மீண்டும் கம்பவாரிதிக்கு வலம்புரியின் பதில் | பகுதி 3

மீண்டும் கம்பவாரிதிக்கு வலம்புரியின் பதில் | பகுதி 3
 
கடந்த இருவாரங்களுக்கு முன்பு, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும், அதுதொடர்பாக வடக்குமாகாண முதலமைச்சர் மீதான ஐயங்களையும் கருவாகக்கொண்டு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் எழுதி உகரத்தில் வெளியான "கொழும்பின் சதியா? யாழின் விதியா?" எனும் கட்டுரை பெரும் அதிர்வினை உருவாக்கியது வாசகர் அறிந்ததே.

அக்கட்டுரையில் தமிழ் மக்கள்  பேரவை தொடர்பாகவும், முதலமைச்சர் தொடர்பாகவும் சொல்லப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தும் முகமாக வலம்புரியில் அடுத்தடுத்த நாட்களே, புருசோத்தமன் எனும் புனைபெயரில் "கம்பவாரிதிக்கு ஓர் அன்புமடல்" எனும் தலைப்பில் மூன்று பாகங்களாக கட்டுரை வெளியாகியது. உகரமும் 'பத்திரிகா தர்மத்தை' மதித்து அதனைப்பிரசுரித்தது.
 CLICK HERE TO DOWNLOAD
 
தொடர்ந்து அம்மடலுக்கு பதில்மடலாக "வலம்புரி புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல்" எனும் தலைப்பிலே உகரத்தில் மூன்று பாகங்களாக கம்பவாரிதியின் மடல் வெளியாகியது. 'வலம்புரியும்' அதனை அப்படியே வெளியிட்டு தன் ஊடக தர்மத்தை கூட்டிக்கொண்டது. அத்தோடு நின்றுவிடாமல் மீண்டும் கம்பவாரிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. அதன் பாகம் 3 இன்றைய வலம்புரியில் வெளியாகியது. அதனை இங்கு உகரம் வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்கிறோம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
கம்பவாரிதிக்கு புருசோத்தமனின் பதில்! 03
2016-01-06 11:46:58
 

 

பேரன்புமிகு கம்பவாரிதி அவர்களுக்கு,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் தோற்றுவிக்கப்பட்டது என்பதே உண்மை. எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை என்கிறார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களோ  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் தான் உருவாக்கப்பட்டது என்பதை உறுதிபடக் கூறுகிறார்.
 

ஒரே கட்சியில் இரண்டு வேறுபட்ட சாட்சியங்கள். என்ன செய்யமுடியும். நம்மைப் பொறுத்தவரை தமிழ்மக்களுக்கு ஒரு சரியான, நேர்மையான அரசியல் தலைமை தற்போது கிடைக்கவில்லை என்பதை மட்டும் உறுதிபடக்கூறுவேன். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் நம்புகின்றேன்.
இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டது ஏன்? என்ற ஆய்வு இருக்குமாக இருந்தால் தமிழர் தரப்பில் புத்திஜீ விகள் அடங்கிய ஒரு பலமான அமைப்பு இல்லாமல் போனமைதான் என்றுணர முடியும்.
 
தென்பகுதியைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,  ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரண்டு பிரதான கட்சிகள் இருந்தமையால் அவை ஒன்றை ஒன்று விமர்சித்ததன் காரணமாக அந்தக் கட்சிகள் தம் மக்களுக்கான பணி தொடர்பில் கடுமையாகப்பாடுபட்டன. அதே நேரம் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒழுங்குபடுத்துவதில் ஜே.வி.பி. போன்ற மூன்றாவது கட்சிகளின் வகிபங்கும் கனதியாக இருந்தன. 
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை இலங்கைக்கு குறிப்பாக சிங்கள மக்களுக்கு ஆபத்தானது என்பதை விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்னர்- மகிந்த ராஜபக்­சவின் எதேச்சதி காரப்போக்கு சிங்களத் தலைவர்களுக்கு  உணர்த்தியபோது, சிங்களத் தலைவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்காகக் களத்தில் குதித்தனர்.
 
சர்வதேச நாடுகளுடன் முரண்பட்டுப்போன மகிந்த ராஜபக்­சவின் பலவீனத்தை அதற்காகப் பயன்படுத்தி னர். சர்வதேச நாடுகளை  தமதாக்கிக் கொண்டு அந்த நாடுகளின் ஒத்து ழைப்போடு மகிந்த ராஜபக்­சவை வீடேக வைத்தனர்.  
 
இதன் பின்னணி முழு வதிலும் சிங்கள புத்திஜீவிகளின் பங்கும் பணியும் தாராளமாக இருந்தன என்பதை தாங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இங்குதான் சிங்களப் புத்திஜீவிகளிடம் தமிழினம் நிறையக் கற்க வேண்டியுள்ளது.
 
விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதிலும் அதன் பின்பான சிங்களக் குடியேற்றங்களின் போதும்  மகிந்த ராஜபக்­சவுக்கு வியூகம் அமைத்துக் கொடு த்த சிங்களப் புத்திஜீவிகள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துக் கொள்வதிலும் போருக்குப் பின்பு சர்வாதிகார ஆட்சி நிலை பெறக்கூடாது என்பதிலும் விழிப்பாக இருந்தனர். 
 
அவர்களின் இந்த விழிப்பு நிலைதான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டின் ஜனாதி பதியாக மைத்திரிபால சிறிசேனவை முன்கொண்டு வந்தனர். இங்குதான் கொழும்புத்  தமிழ்த் தலைமை தென்பகுதி புத்திஜீவிகளின்  சக்கர வியூகத்திற்குள்ளும்  சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க போன்ற  சிங்கள  அரசியல் தலைவர்களின் ஆசாட பூதித்தனங்களுக்குள்ளும் வீழ்ந்து போயினர்.
 
சர்வதேச விசாரணை என்பதை இல்லாமல் செய்வதற்கு சந்திரிகா- ரணில்- மைத்திரி என்ற முக்கூட்டு அரசியல் தலைவர்கள் அமைத்த வலைக்குள் சம்பந்தப் பெருமான் அகப்பட்டுக் கொண்டார். பக்தி வலையில் படுவோன்காண் என்பது போல, சம்பந்தர் தென்பகுதி அரசியலின் ஆசாட பூதித்தனங்களுக்குள் அகப்பட்டுக் கொண்டார். அதற்கான வியூகம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவால் மிகநுட்பமாக அமைக்கப்பட்டிருந்தது.
 
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு பிரதிநிதி தான் விரும்பி யவர்களுடன்  சென்றார் எனும் போது தமிழினம் கொதித்தெழுந்திருக்க வேண்டாமோ?
 
வன்னிப்  பெருநிலப்ப ரப்பில் ஐயகோ! எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கதறிய தமிழ்மக்களைக் கொன்றொழித்த கொடுமைத்தனத்தை முதலில்  மறந்துபோனது சம்பந்தரும் அவரோடு  சேர்ந்தவரும் என்பதை அறம் உரைக்கவல்ல கம்பவாரிதி இ.ஜெயராஜ் மறந்திருப்பாராயின் அது நாம் செய்த பாவமேயன்றி வேறு எதுவுமன்று என்றே கூறவேண்டும்.
 
வன்னிப்  பெருநிலப் பரப்பில் கொன்றொழிக்கப்பட்ட எங்கள் உறவுகளின்  அவலக்குரல்கள் நடுச்சாமத்திலும் உறங்கும்போதும் கேட்டுத் திணுக்குற்று  எழுகின்ற  தமிழ்த் தலைவன் ஒருவன் இருந்திருப்பானா யின் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  எங்கள் விடயம் சர்வசாதாரணமாக விலைபட்டுப் போயிருக்காதன்றோ.
 
விடுதலைப்புலிகள் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தருக்கும் அவரோடு சேர்ந்தவருக்கும் இருந்த கோபம் வன்னி அவலத்தை எந்த விலையிலும் விற்றுவிடலாம் என்ற மனநிலையை அவர்களிடம் தோற்றுவித்தது இதுவே உண்மையும்  சத்தியமுமாகும். 
உண்மையான தமிழ்த் தலைவன் இல்லாததன் விளைவுதான் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் எங்கள் இனத்திற்கு ஏற்பட்ட ஏமாற்றம். 
 
ஐ.நா.  மனிதவுரிமைகள் பேரவையில் எங்கள் தொடர்பில் விவாதம் நடக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், தமிழ் அரசியல் தலைவர்களும் தமிழ்ப் புத்திஜீவிகளும் அடங் கிய ஒரு உயர் மட்ட தூது க்குழுவையல்லவா ஜெனிவாவுக்கு அனுப்பி வைத்திருக்கவேண்டும்.
வன்னிப் பெருநிலப் பரப்பில் நடந்த  பேரழிவு தனிப்பட்ட சம்பந்தருக்கோ தனிப்பட்ட சுமந்திரனுக்கோ ஆன தல்ல. அது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமான இழப்பு.
 
ஐ.நா. மனிதவுரிமை கள் பேரவையில் நடப்பது என்ன? என்பதை அறிவதற்கும்  அதன் வெளிப்படைத் தன்மைக்குமாக தமிழ் தரப்புகள் அடங் கிய தூதுக்குழுவை அனுப்புவது பற்றிச் சிந்தியாத சிந்தனைக்கு   இராஜதந்திரம் என்று மகுடம்  சூட்டுவது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.
 
ஆக, ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடக்க வேண்டும். அதற்கு உலக நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்று  அல்லும் பகலும் தவமிருந்த தமிழர்கள் கண்ட  பலன் என்னவோ? எங்கள் பிரதிநிதிகளே சர்வதேச விசாரணைக்கு மண் போட்டனர் என்ற செய்தி வன்னியில் நட ந்த கொடுஞ்செயலிலும் கொடுமையானது.
 
என்ன செய்வது எங் கள் புத்திஜீவிகள் மெளன மாக இருந்ததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தேர்தல் நினைப்பில் சம்பந்தருக்கு பயந்து ஒதுங்கி நின்றதால் சம்பந்தரே சாட்சாத் ஈஸ்வரனாகி தென்பகுதிக்கு அருளாட்சிபுரிந்து தமிழினத்தை தவிக்க விட்டார் என்ற இந்த உண்மையை  தாங்கள் அறியாமல் இருந்திருக்க மாட்டீர்கள். 
 
(நாளை தொடரும்)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
 CLICK HERE TO DOWNLOAD
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.