Array

19 Apr 2019

ன்பின் புருஷோத்தமனுக்கு,
வணக்கம்,
நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
பத்துப் பாகங்களாக நீங்கள் எனக்கு எழுதிய  தொடர் கடிதம் என் பார்வைக்கு வந்தது.
முதலில் என்னைப் பற்றி நீங்கள் தந்த பாராட்டுதல்களுக்கு நன்றிகள்.
உங்கள் கடிதத்தின் நீட்சி சற்று அதிகரித்து விட்டதாக உணர்கிறேன்.
உங்கள் மன எண்ணங்களைக் கொட்ட எனக்கான கடிதத்தைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
எனை விழித்து இக்கடிதம் எழுதப்பட்டிருந்தாலும்,
அது எனக்கான கடிதமல்ல என்பதை விளங்கிக் கொள்கிறேன்.
அவலை நினைத்து உரலை இடித்த கதைதான் இது.
அக் கடிதத்தில் தெரிந்த உங்களின் பத்திரிகையாளக் கெட்டித்தனத்தை மட்டுமே ரசிக்க முடிந்தது.
உங்கள் கடிதத்தில் பதிவான விடயங்கள்பற்றி விபரித்து எழுத நான் விரும்பவில்லை.
நேரமின்மை அதற்கான ஒரு காரணம்!
பிழை என்று தெரிந்தே பொய்மையை வளர்க்க நினைக்கும் உங்களுக்கு,
பதில் வரைவதால் என்ன பயன் விளையப்போகிறது என்பது மறுகாரணம்!
ஆனாலும் என் மதிப்புக்குரியவர் தாங்கள் என்பதாலும்,
உங்கள் கடிதம் பத்திரிகையில் வெளிவந்ததாலும்,
என் நிலைப்பாட்டை மக்கள் மன்றின் முன் தங்களுக்கு அறியத் தரவேண்டியிருக்கிறது.

❖❖❖❖❖❖
மக்களை எழுத்தின் மூலம் திருத்திவிடலாம் என்ற நம்பிக்கை,
மெல்ல மெல்ல என்னை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.
அதிக நேரம் செலவழித்து நான் எழுதிய அரசியல் கட்டுரைகள்,
மக்கள் மத்தியிலோ தலைவர்கள் மத்தியிலோ,
பெரிய மாற்றங்கள் எதனையும் விளைவிக்கவில்லை.
உண்மைகளை நிரூபணத்தோடு நான் எழுதியும்,
அவ் உண்மைகளை உணர மறுத்து,
தாம் தாம் பிடித்த முயல்களுக்கு மூன்று கால்களே என,
அனைவரும் பிடிவாதம் பிடித்து நிற்பதைக் காண சலிப்புத் தோன்றுகிறது.
இன்னும் எம் இனத்திற்கான இடர் முடியவில்லை என்று உணர்வதால்த்தான்,
அண்மைக்காலமாக எனது அரசியல் எழுத்துக்களை நான் குறைத்துக்கொண்டேன்.
உங்கள் கடிதமும் எனது மேற்கருத்தை உறுதி செய்வதாக அமைந்தது துரதிஷ்டமே.

❖❖❖❖❖❖
சுமந்திரனையும், தமிழரசுக்கட்சியையும் தாழ்த்துவதும்,
முன்னால் முதலமைச்சரை அவர் தகுதிக்கு அதிகமாக உயர்த்துவதுமே,
உங்கள் நீண்ட எழுத்தின் நோக்கமாக இருந்தது.
முன்பு பலதரம் சொன்ன ஒன்றையே இவ்விடத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
நான் சுமந்திரனதோ, தமிழரசுக்கட்சியினதோ ஆதரவாளனும் அல்லன்.
முதலமைச்சரின் எதிரியும் அல்லன்.
இனத்தின் உயர்வே என் நோக்கம்.
அதற்காக இருசாராரையும் நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.
எனது முன்னைக் கட்டுரைகளைப் படித்தீர்களேயானால்,
இவ் உண்மை உங்களுக்குப் புலனாகும்.
முதலமைச்சர் மீதான விமர்சனங்களில் இருக்கும் கடுமை,
மற்றையவர்கள் மீதான விமர்சனங்களில் இல்லை என்பீர்கள்.
உண்மைதான்!
நான், அவரை சற்றுக் கடுமையாக விமர்சிப்பதற்குக் காரணம்.
முதலமைச்சரது பிழையான நடைமுறைகளும்,
தன் முன்னேற்றத்திற்காக இனத்தை பின்னோக்கி நகர்த்த முனையும் செயற்பாடுகளுமேயாம்.

❖❖❖❖❖❖
நீண்ட தர்மத்தையும் நீதியையும் பேசுகின்ற உங்களிடம்,
ஒன்றைக் கேட்க மனம் விரும்புகிறது.
இயக்கங்களை விமர்சிக்கத் தவறியமையே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று என்று,
நீங்களே எழுதியிருக்கிறீர்கள்.
ஒரு நேர்மையுள்ள பத்திரிகையாளனாக,
ஒருநாளாவது முன்னால் முதலமைச்சரைக் கடுமையாய் நீங்கள் விமர்சித்திருக்கிறீர்களா?
இல்லையென்பதே பதிலாகிறது.
அப்படியானால் முதலமைச்சர் எந்தத் தவறும் செய்யவில்லையா?
நானே அவரது குற்றங்கள் பலவற்றை வரிசைப்படுத்தி உங்களுக்கே கடிதம் எழுதியிருக்கிறேன்.
அதைத்தான் விடுங்கள்.
அவரோடு உடனிருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் தொடக்கம் நீதிமன்றம் வரை,
தொடர்ந்து அவரது பிழைகளைக் கண்டித்து வரும் நிலையில்,
அவரில் ஒரு பிழைகூட உங்களுக்குத் தெரியவில்லை என்றால்,
உங்களின் நேர்மையை நான் ஐயுற வேண்டியிருக்கிறது.

❖❖❖❖❖❖
தமிழரசுக்கட்சியில் சுமந்திரனின் ஆதிக்கம்,
நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது,
ரணிலுக்குத் தமிழரசுக்கட்சி செய்த ஆதரவு,
இலங்கை அரசுக்கு ஐ.நா.மனித உரிமைகள் சபையில்,
கால அவகாசம் வழங்குவதற்கு ஆதரவளித்த,
கூட்டமைப்பு பற்றியதான உங்களின் கண்டனம்,
கலப்பு நீதிமன்றம் பற்றிய அவர்களின் செயற்பாடுகள்,
சர்வதேச நீதிமன்ற விடயத்தில் சுமந்திரனின் முரண்பாடு,
மைத்திரி பற்றிய மிக உயர்ந்த உங்களின் நற்சான்றுப் பதிவுகள்,
தமிழரசுக்கட்சியின் சரியான செயற்பாடுகளையும் பிழையாக்கும் உங்கள் விமர்சனம்,
முன்னால் முதலமைச்சரின் பிழையான செயற்பாடுகளையும் சரியாக்கும் உங்கள் வியாக்கியானம் என,
பலவிடயங்களையும் உங்கள் கடிதத்தில் அள்ளித் தெழிந்திருந்தீர்கள்.
அக்கடிதத்தின் இடையிடையே நீங்கள் தூவியிருந்த,
இலக்கிய மேற்கோள்களை மட்டுமே ரசிக்கமுடிந்தது.
மற்றும்படிக்கு, ஒருவரைத் தாழ்த்த வேண்டும் என நினைத்துத் தாழ்த்தியும்,
மற்றொருவரை உயர்த்த வேண்டும் என நினைத்து உயர்த்தியும்,
நீங்கள் திட்டமிட்டு எழுதிய எழுத்துக்களில்,
மக்களை ஏமாற்றும் வஞ்சகமும் பொய்மையுமே அதிகம் தெரிந்தன.
கிட்லரின் கொடுமைகளைத் தன் வாக்குத்திறனால்,
திரையிட்டுக் காத்து வந்த 'கோயல்பல்ஸ்'  தான் என் நினைவில் வந்தான்.

❖❖❖❖❖❖
மற்றவர்களின் பிரச்சினைகள் பற்றி நீங்கள் எழுப்பியிருந்த,
கேள்விகள் அனைத்திற்கும் நான் பதில் தரவேண்டிய அவசியமில்லை.
கடிதம் எனக்கு எழுதப்பட்டிருந்தாலும்,
உங்களால் குற்றம் சாட்டப்பட்டவர்களே,
அக்கேள்விகளுக்குப் பதில் எழுதவேண்டியவர்களாகின்றனர்.
பதில் சொல்லமுடியாமல் சமாளிக்கிறேனோ? என நினைப்பீர்கள்.
நிச்சயம் அப்படியில்லை!
உங்கள் கடிதக் கேள்விகளுக்கு எனது முன்னைய அரசியல் கட்டுரைகளில்,
ஏலவே தெளிவான பதில்கள் வந்துவிட்டன.
பதில் சொல்லமுடியாத அளவிலான கேள்விகள் ஏதும் உங்கள் கடிதத்தில் இல்லை.
ஆனாலும் உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லவிரும்பவில்லை.
காரணம் மற்றவர்களுக்காக நான் பதிலுரைக்கத் தலைப்பட்டால்,
உங்களைப் போல நானும் நடுநிலை என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு,
அணிசார்ந்து செயற்படுபவனாகிவிடுவேன்.
அதனைக் கருதியே தங்களின் குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு நான் பதில் உரைக்க விரும்பவில்லை.
ஆனாலும் சமூக அரங்கில் ஒருசில விடயங்களை,
உங்களோடு நான் பகிர்ந்து  கொள்ளவேண்டியிருக்கிறது.

❖❖❖❖❖❖
ஐ.நா.மனித உரிமைகள் சபையில்,
இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பற்றி,
நீங்களும் உங்களைப் போன்ற சிலரும்,
பிழையான ஒரு கருத்தை மக்கள் மத்தியில் விதைக்கப் பார்க்கிறீர்கள்.
இக்கால அவகாசத்திற்குத் தமிழரசுக் கட்சி தரும் ஆதரவு,
இனத்திற்குச் செய்யும் துரோகம் என்பதாய் நீங்கள் விபரிக்க,
அழிவுகளைச் சந்தித்து உணர்ச்சிக் கொதிப்பிலிருக்கும் மக்களும்,
அதை உண்மை என்று நினைந்து ஏமாறப் பார்க்கிறார்கள்.
தமிழரசுக்கட்சியை வீழ்த்த உங்களைப் போன்றோரால் முன்வைக்கப்படும் மேற்படி கருத்துக்கள்,
மக்கள் மத்தியில் ஓரளவு வேலைசெய்யவும் தொடங்கியிருக்கின்றன.
உங்களைப் போன்ற உள்நோக்கம் கொண்ட புத்திசாலிகள் ஏமாற்ற நினைத்தால்,
மக்கள் ஏமாறுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதானே.
பாவம், கூட்டமைப்பினருக்கும் மக்கள் மன்றில்,
சரியான முறையில் உண்மையை விளங்கப்படுத்தி,
மக்களை வழிப்படுத்தும் ஆற்றலும் இருப்பதாய்த் தெரியவில்லை.
தம்மைப் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் உரைப்பதில்,
அவர்கள் காட்டும் அலட்சியம் இன்னொரு ஆச்சரியம்!

❖❖❖❖❖❖
நீங்கள் இருவரும் என்னவும் செய்துவிட்டுப் போங்கள்.
மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதுக்காய்,
நான் அறிந்த சில விடயங்களை இவ்விடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

❖❖❖❖❖❖
2006 ஆம் ஆண்டளவில் தொடக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் சபை,
47 நாடுகளை சுழற்சி முறையில் உட்கொண்டு நிற்கிறது.
ஆபிரிக்க நாடுகளுக்கான பிரதிநிதித்துவமாக 13 நாடுகளும்,
ஆசிய பசுபிக் நாடுகளுக்கான பிரதிநிதித்துவமாக 13 நாடுகளும்,
கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதிநிதித்துவமாக 06 நாடுகளும்,
மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதிநிதித்துவமாக 07 நாடுகளும்,
அமெரிக்கக் கண்ட நாடுகளுக்கான பிரதிநிதித்துவமாக 08 நாடுகளும் என,
47 நாடுகளும் இச்சபையில் பகுதிபடுத்தப்பட்டுள்ளன.
மேற்படி ஐ.நா. மனிதஉரிமைகள் சபையை,
நாம் நினைக்கும் அளவிற்கான வலிமை பெற்ற ஒருசபையாய்க் கருதவும் முடியாதென்பது வேறு விடயம்.
அதற்கு உதாரணமாய் ஒன்றைச் சொல்லலாம்.
2006 முதல் 2015 வரை இச்சபையில்,
இஸ்ரேலுக்கு எதிராக 62 தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
அத்தீர்மானங்களில் ஒன்றைக் கூட இஸ்ரேல் அமுல்படுத்தவில்லை.
அப்படியிருந்தும் இஸ்ரேலை இச்சபையால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதுதான் இச்சபையின் பலத்தின் யதார்த்தம்.

❖❖❖❖❖❖
ஆரம்பித்த நாள் முதல்,
வருடத்தில் மார்ச், ஜூன், செப்ரெம்பர் ஆகிய மாதங்களில்,
மூன்று கூட்டங்களை  நடத்துவதை இச்சபை வழக்கமாய்க் கொண்டிருக்கிறது.
அவசிய தேவை ஏற்படும் பட்சத்தில்,
விஷேட கூட்டங்களையும் இச்சபை நடாத்தும்.
இக்கூட்டங்களின் நிறைவில் ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர்,
சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகள் பற்றிய,
தனது  அறிக்கையைச் சமர்ப்பித்து வருகிறார்.

❖❖❖❖❖❖
இச்சபையில் 2014 மார்ச் கூட்டத்தில்,
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 5 நாடுகள் இணைந்து,
இலங்கைக்கு எதிராக பாரதூரமான பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தன.
இப்பிரேரணைக்கு  ஆதரவாக 23 நாடுகளும்,
எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.
12 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்தன.
வாக்களிக்கத் தவறிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மீது செலுத்தப்படும் கடுமையான அழுத்தம்,
அங்குள்ள பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கச் செய்துவிடலாம் என்று,
தான் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை அப்போது இந்தியா சொல்லியது.
பெரும்பான்மை பலத்தோடு நிறைவேற்றப்பட்ட இப்பிரேரணை,
போரின் பின் மஹிந்தவினால் அமைக்கப்பட்டு,
மஹிந்தவை பெரும் சங்கடத்திற்கு ஆளாக்கிய
'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்திற்கான ஆணைக்குழுவின்' சிபாரிசுகளை ஏற்று,
சுயாதீனமானதும் நம்பிக்கையானதுமான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியது.
இப்பிரேரணையால் உலக அளவில் ஏற்பட்டிருந்த நெருக்கடியை,     
சமாளிக்கவேண்டிய நிலைமை இலங்கைக்கு.
இந்நிலையில் இங்கு யாரும் எதிர்பாராத வண்ணம் ஆட்சி மாற்றம் நிகழ,
தமிழர்களின் ஆதரவையும் பெற்று ஆட்சி அமைத்தவர்கள்,
2015 செப்ரெம்பர் மாதக் கூட்டத்தில் அமெரிக்காவுடன்  இணைந்து,
இலங்கைப் பிரச்சினை சம்பந்தமான ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தனர்.

❖❖❖❖❖❖
இலங்கையும் இணை அனுசரணை வழங்கிய இப்பிரேரணைக்கு,
வேறு 8 நாடுகளும் அனுசரணை வழங்க முன்வந்தன.
மேற்படி கூட்டத்தொடரில்,
பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, யுத்தக்குற்றம், நீதி பொறிமுறை என,
பல விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஆனால் இரண்டாண்டுகள் கழித்து நடந்த கூட்டத்தில்,
இப்பிரேரணை சம்பந்தமான எந்தவித முன்னேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத இலங்கைஅரசு,
அவற்றை நடைமுறைப்படுத்த மேலும் இரண்டாண்டுகள் அவகாசம் கோரி பெற்றுக்கொண்டது.

❖❖❖❖❖❖
அதன் பிறகு இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து,
அண்மையில் நடந்த மேற்படி சபையின் கூட்டத்திலும்,
ஏற்றுக்கொள்ளப்பட்ட 36 விடயங்களை மீளாய்வு செய்தபோது,
அவற்றில் ஆறு விடயங்களைத் தவிர,
மற்றைய விடயங்கள் இலங்கை அரசால் முன்னெடுக்கப்படாமை அறியப்பட்டது.
ஆணையாளர் தனது ஆண்டறிக்கையில்,
இலங்கையை மிகவன்மையாகக் கண்டித்தார்.
சங்கடப்பட்ட இலங்கை அரசு,
ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளை நடைமுறைப்படுத்த,
மீண்டும் இரண்டு ஆண்டுகளைக் கோரியது.
அதனை வழங்க சபை அங்கத்துவ நாடுகள் உடன்பட்டன.
நிகழ்ந்தது இதுதான்!

❖❖❖❖❖❖
இங்குதான் சில கேள்விகளுக்கான விடைகளை நாம் காணவேண்டியிருக்கிறது.
இலங்கை அரசுக்கான அவகாசம் வழங்குதலில்,
நம் தமிழ்த் தலைவர்களுடைய கருத்து,
எந்த அளவிற்கு அங்கீகரிக்கப்படுகிறது என்பது முதற்கேள்வி.
இலங்கை அரசுக்கு அவகாசம் வழங்குவதும் வழங்காததும்,
அங்கத்துவநாடுகளின் கையில் இருக்கும் விடயமே தவிர,
நேரடியாய் நம் தலைவர்களின் கையில் இருக்கும் விடயம் அல்ல என்பது முக்கியமான ஒன்று.

❖❖❖❖❖❖
அடுத்தது,  இலங்கை கோரும் அவகாசத்தை வழங்க மறுக்கும் பட்சத்தில்,
அடுத்து நிகழப்போவது என்ன? என்பது பற்றியது.
அங்கத்துவ நாடுகள் அவகாசம் வழங்க மறுப்பின்,
இலங்கை அரசு மேற்படி பிரேரணைக்குத் தான் வழங்கிய அனுசரணையை,
வாபஸ் பெற்றுக் கொள்ளமுடியும்.
அங்ஙனம் இலங்கை அரசு வாபஸ் பெறுமானால்,
அதனை நிர்ப்பந்திக்;கும் உரிமையை மேற்படி சபை இழந்துபோகும்.
அங்ஙனம், அச்சபைக்கான உரிமை இழக்கப்படுமாயின்,
எங்கள் பிரச்சினையைப் பொறுத்தவரை,
இச்சபையிலிருந்து இலங்கை அரசு தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுவிடும்.

❖❖❖❖❖❖
மேற்சொன்னது நடந்தால்,
இம் மன்னிப்புச்சபை இரண்டே இரண்டு வழிகளில்த்தான் இலங்கையை நிர்பந்திக்க முடியும்.
அதில் ஒன்று, மேற்படி சபையின் உறுப்புநாடுகள் போர்க்குற்றத்தோடு சம்பந்தப்பட்டவர்களை,
தத்தம் நாடுகளில் நீதியின் முன் நிறுத்தலாம்.
அதுவும் அவ்வவ் நாடுகளில் அதற்குரிய சட்ட ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமேயாம்.

❖❖❖❖❖❖
மற்றையது, போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லுதல்.
அதனையும் இன்றைய நிலையில் சாத்தியப்படாத ஒன்றாகத்தான் கருதவேண்டியிருக்கிறது.
காரணம், முன்பு பலநாடுகளின் பங்களிப்போடு 'றோம்' நகரத்தில் நடந்த மாநாட்டின் முடிவில்,
புகழிடம், இனப்பிரச்சினை, மனிதகுலத்திற்கு எதிரான செயற்பாடு,
யுத்தக்குற்றம், ஆக்கிரமிப்பின் குற்றம் என்பவை சம்பந்தமாக,
சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துதல் பற்றி செய்யப்;பட்ட,
'றோம்' உடன்படிக்கையில் இன்றுவரை இலங்கை கைச்சாத்திடவில்லை.
அதனால் போர்க்குற்றவாளிகளை நாம் நினைக்கிறபடி,
நேரடியாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துதலும் முடியாத ஒன்றேயாம்.

❖❖❖❖❖❖
இலங்கையைக் கட்டுப்படுத்த எஞ்சியிருக்கும் ஒரே வழி,
மேற்படி இலங்கைப் பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்புச்சபையில் சமர்ப்பித்து,
அச்சபையைக் கொண்டு இப்பிரச்சினையை அங்கீகரிக்கச் செய்தால்,
இலங்கையின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம்.
அந்நீதிமன்றம் குற்றம் காணின் அப்போர்க்குற்றவாளிகள் யாராயிருந்தாலும்,
அவர்களைத் தண்டிக்க முடியும்.

❖❖❖❖❖❖
அப்படியானால் அதனை உடனே செய்யவேண்டியது தானே என்பீர்கள்.
ஆனால் அதுவும் நடக்கக் கூடிய காரியமில்லை.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 15 நாடுகள் உறுப்புரிமை பெற்றிருக்கின்றன
அவற்றில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா, சீனா ஆகிய 5 நாடுகளும்,
இச்சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாய் இருக்கின்றன.
மற்றைய 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
மேற்படி நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு,
'வீற்றோ' என்னும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதென்ன வீற்றோ அதிகாரம் என்கிறீர்களா? சொல்கிறேன்!

❖❖❖❖❖❖
ஒரு பிரேரணை பாதுகாப்புச் சபைக்கு வரும்போது,
மேற்படி சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றேனும்,
எதிர்ப்பு தெரிவிக்குமானால்,
அப்பிரேரணையை சபை நீக்கிவிடும் என்பதே 'வீற்றோ' அதிகாரத்திற்கான விளக்கம்.
இது எப்படி நீதியாகும் என்பீர்கள்?
நீதி கூட பலசாலிகளின் கையில்தான்; என்பதற்கு, 'வீற்றோவும்' ஒரு சாட்சி. அவ்வளவுதான்!
மேற்படி ஐ.நா. பாதுகாப்புச்சபையில்  இடம்பெற்றுள்ள ரஷ்யா, சீனா போன்ற நாடுகள்,
இலங்கையின் நட்பு நாடுகள்.
இலங்கை பற்றிய பிரச்சினை பாதுகாப்புச்சபைக்கு வருமானால்,
அந்நாடுகள் அப்பிரச்சினையை தமது 'வீற்றோ' அதிகாரத்தினால் நீக்கப்போவது சர்வநிச்சயம்.
அங்ஙனம் அவை நீக்கும் பட்சத்தில்,
தமிழர் பிரச்சினை உலக அரங்கில் ஒன்றுமில்லாமல போய்விடும்.
இதுதான் யதார்த்தநிலை.

❖❖❖❖❖❖
இவற்றை நாம் உணர்ந்து கொண்டால் ஐ.நா.மனித உரிமைகள் சபையில்,
முடிந்தவரை இலங்கை அரசை நிறுத்தி வைப்;பதே,
நம் இனத்திற்கு நாம் செய்யக்கூடிய ஒரே நன்மையாம்.
இதனை அறியாது அவகாசம் வழங்கக்கூடாது என்று,
உங்களைப் போன்றவர்கள் சொல்லிவருவதும்,
வழங்குவதை ஏற்றுக்கொள்ளும் கூட்டமைப்பை துரோகிகளாய் இனங்காட்டுவதும்,
பொய்மையின்பாற்பட்ட விடயங்கள் என்பதை,
உங்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க விரும்புகிறேன்.
நான் ஒரு இலக்கியவாதி.
என் அறிவுக்குப்பட்ட அளவில் இவ்விடயம் பற்றி எழுதியிருக்கிறேன்.
இதில் ஒருசில திருத்தங்கள் இருக்கக்கூடும்.
எனினும் நான் சொன்ன அடிப்படைகளில் பிழை இருக்காதென்றே கருதுகிறேன்.
ஒரு பத்திரிகையாளனாய், இவ்விடயங்களை நீங்கள் அறியாமலிருக்க நியாயமில்லை.
அறியாமலிருப்பின் ஒரு பத்திரிகையாளனாய்;த் தோற்றவராவீர்கள்.
அறிந்திருப்பின் ஒரு பத்திரிகையாளனாய் நடுநிலை தவறி மக்களை திசை திருப்புபவராவீர்கள்.
இரண்டுமே தவறுதான்!

❖❖❖❖❖❖
உங்கள் கடிதத்தொடரில் அதிக இடம்பிடித்த விடயங்களில்,
மேற்சொன்ன ஐ.நா.சபை விடயம் ஒன்று.
அடுத்தது, தமிழரசுக்கட்சி, சுமந்திரன். கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுகள்.
அதற்கான பதில்களை விரும்பினால் அவர்களே உரைப்பார்கள்.
மூன்றாவது, ஜனாதிபதி மீதான உங்களின் பாரட்டுரைகள்.
ஆரம்பத்தில் மைத்திரி செயற்பட்ட போது,
உங்கள் கருத்தே எனது கருத்தாகவும் இருந்தது.
ஆனால் ஆட்சிக் கலைப்பின் பின் அவரது செயற்பாடுகள் அனைத்தும்,
ஜனநாயகத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாத கீழ்மைகளாயின.
அக்கீழ்மைகளையும் நீங்கள் சரியாய்க் காட்ட முயல்கிறீர்கள்.
நன்மைகள் ஒன்றுமே செய்யாத பல தவறுகள் செய்த,
முன்னாள் முதலமைச்சரையே நியாயப்படுத்தும் நீங்கள்,
இதனைச் செய்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்.
ரணிலுக்கான ஆதரவு, மைத்திரி, ரணில் ஆகியோரை இணைக்காத குற்றம் போன்ற,
சிறுசிறு விடயங்களை கடிதத்தின் விரிவு கருதி புறந்தள்ளுகிறேன்.

❖❖❖❖❖❖
இனி, முக்கியமாக உங்களுக்குச் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.
ஓர் ஆற்றலாளராய் நீங்கள் என் மனதில் பதிந்திருப்பதாலேயே,
இவற்றை எழுத வேண்டியிருக்கிறது.
இதுவரை எம் இனம் பட்ட துன்பங்களுக்கான முதல் காரணம்,
நம் தலைமைகளின் நடுவுநிலையின்மையும் உண்மையின்மையும்,
கட்சிகள், இயக்கங்கள் என அனைத்தையும் உட்படுத்தித்தான் இதைச் சொல்கிறேன்.
இரண்டாவது காரணம்,
அத்தலைமைகளை நெறிசெய்யவேண்டியவர்களிடமிருந்த பக்கச்சார்பு,
வென்றவர்கள் எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்துவதும்,
சோர்ந்தவர்கள் எதைச் செய்தாலும் அதை எடுத்தெறிவதுமான,
அறிஞர், சமூகப்பெரியோர், ஊடகக்காரர், சமயவாதிகள் என்பவர்களின் பக்கச்சார்பே,
நம் தலைவர்களின் ஆணவப்போக்கிற்கு அடிப்படைக் காரணமாய் இருந்தது.
அப்பக்கச் சார்பே அத்தலைவர்களையும் அழித்து,
நம் இனத்தையும் அழிவுக்குள்ளாக்கியது நிதர்சனம்.

❖❖❖❖❖❖
வரலாறு காணாத ஒரு மிகப்பெரிய அழிவை நம் இனம் சந்தித்தபிறகும்,
உங்களைப் போன்றவர்கள், அதே பழைய பாதையைத் திறக்க முயல்வது கண்டு மனம் வருந்துகிறேன்.
'விதியே! விதியே! தமிழச்சாதியை என் செயக்கருதி இருக்கிறாயடா?' என,
என் நெஞ்சம் விம்மி நிற்கிறது.
அன்பின் சகோதர!
அறம் பற்றியும் தர்மம் பற்றியும் இனம் பற்றியும் நீளப் பேசி விமர்சிக்கும் நீங்கள்,
உங்கள் செயற்பாடுகளை உள்ளுக்குள்ளேனும் விமர்சித்ததுண்டா?
என் மாணவர்களுக்கு எப்பொழுதும் நான் ஒன்றைச் சொல்வேன்.
முதலில் உங்கள் புத்தியை நேர்மைப்படுத்துங்கள்.
பின்னர் அப்புத்தியை உங்களின் வக்கீலாக்காமல் நீதிபதியாக்குங்கள்.
அப்போது வாழ்வின் அறப்பாதை தானே திறக்கும் என்பதுவே அச்செய்தி.
உங்களுக்கும் அதனையே உரைக்கவிரும்புகிறேன்.
ஒரு பட்டிமண்டபப் பேச்சாளளனாய்,
எதிராளியின் கருத்துக்கு என்ன பதிலுரைக்கலாம் எனச் சிந்திப்பதை விடுத்து,
தயை கூர்ந்து உண்மையைத் தரிசிக்க விளையுங்கள்.
உயிர் நண்பராய்க் கருதி மேற்சென்று இடிக்கும் பொருட்டாய்,
உங்கள் குறைகளை நீங்கள் விளங்குதற்காக,
உங்களை நோக்கிச் சிலகேள்விகள்.
• ஒரு பத்திரிகையாளனாய் நடுநிலை பேணுகிறீர்களா? அல்லது அணிசார்ந்து உங்கள் பத்திரிகையை வளர்க்க விரும்புகிறீர்களா?
• உங்கள் கவலை இனம் பற்றியதா? அல்லது நீங்கள் சார்ந்திருக்கும் நபர்களின் இனம் பற்றியதா?
• தமிழ்மக்கள் பேரவை அமைப்பின் போது நடுநிலையாய் செயற்பட்டதாய் கருதுகிறீர்களா?
• அரசியல் சார்பில்லை என்று சொன்ன நீங்கள் மறைமுகமாய் அரசியல் சார்புடன் பேரவையை அமைத்தது ஏன்? அரசியலாளர்களை தவிர்த்துவிட்டு அவ்வமைப்பை நிறுவாமல் உங்களைச் சார்ந்த ஒருசில அரசியலாளர்களை உள்ளீர்த்தது எதனால்?
• அரசியல் சார்பில்லை என்று சொன்ன உங்களது பேரவைக் கூட்டத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் தன் கட்சியை ஆரம்பிக்க இடம் கொடுத்தது எப்படி?
• அரசியல் சார்பில்லை என்று அறிவித்த நீங்கள் கட்சி தொடங்கிய பின்பும் முதலமைச்சரை பேரவையினுள் வைத்திருப்பது எப்படி?
• கல்வியும் பதவியும் சமயமும் விபூதியும் தான் தலைமையின் அடையாளம் என்று கருதுகிறீர்களா?
• உங்கள் எழுத்துக்களில் பதியும் சமயச்சார்பு இன உயர்வைக் காக்கும் என்று கருதுகிறீர்களா?
• ஒரு பத்திரிகையாளனாய் அச்சமயச்சார்பு நடுநிலையானதா?
• தமிழரசுக்கட்சியிலும் கூட்டமைப்பிலும் பிழைகளை தேடித்தேடிக் காணும் நீங்கள், நீதிமன்றம் உட்பட அனைவராலும் உரைக்கப்படும் முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய மறுப்பது ஏன்?
கேட்க புறப்பட்டால் இப்படி கேள்விகள் ஆயிரமாய் விரியும்.
நீங்கள் நடுநிலைமைப்பட்டால் அன்றி,
இக்கேள்விகளை உங்களிடம் கேட்பதில்,
பிரயோசனம் இருக்கப் போவதில்லை என்பதையும் உணர்கிறேன்.
எனது இப்பதில் உங்கள் மனதில் நடுநிலையை உண்டாக்குமானால் மகிழ்வேன்.
அன்றி, அடுத்த வாதத்திற்கு நீங்கள் ஆயத்தப்படுத்தத் தொடங்கினால்,
இனி என்பதில் மௌனமாகவே இருக்கும்.

❖❖❖❖❖❖
மீண்டும் ஒன்றை வலியுறுத்தி முடிக்க விரும்புகிறேன்.
தனிமனிதரின் பிழைகள் அவர்களையும்,
அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களையுமே சிதைக்கும்,
முதலமைச்சரைப் போன்ற உங்களைப் போன்ற பொதுமனிதர்களின் பிழைகள்,
இனம் முழுவதையும் சிதைக்கும்,
'நீங்கள் தான் பிழை செய்கிறீர்கள்!'என்று மறுவாதம் தொடங்குவீர்கள்.
புத்தி அடங்கும்வரை வாதங்களுக்கு முடிவு ஏது?
இனி, காலம் பதிலுரைக்கையில் இக்கருத்துக்கள் பற்றி நாம் விவாதிப்போம்.
நீங்கள் சொன்னதையே நானும் சொல்லி முடிக்கவிரும்புகிறேன்.
எம் இனத்திற்கு இப்போதைய அவசியத்தேவை,
வல்லவர்கள் அல்ல நல்லவர்களாம்!
தங்கள் மீதான மதிப்போடு நிறைவு செய்கிறேன்.

❖❖❖❖❖❖

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.