இலங்கை 04/21 - ஸ்ரீ. பிரசாந்தன்
கவிதை முற்றம் 12 May 2019
உலகப் போட்டி தொடங்கிவிட்டதா?
கிள்ளுக் கீரையா எங்க ளுயிர்கள்
கேட்பதற்கிங்கு யாருமில்லையா?
புல்லுக் கட்டுள் பாம்பு கிடப்பதைப்
புரிந்தும், புரியா தவர் போல்
அள்ளிக் கட்டி அடுப்படி வைத்த
அந்தகத்துக்கோர் அளவு இல்லையா?
வில்லுப் பாட்டில் ஆமாம் போடும்
விதூசகர் தாமே தலைவர் ஆகிட,
கள்ளுக் கொட்டில் தவறணை போலக்
காட்சி கொடுக்குது அரசியல் மேடை,
பல்லுக் கொட்ட விழுந்த மகவினைப்
பரிவுகாட்டிப் பயம் போக்காமல்,
மல்லுக் கட்டி நிற்கும் மனிதரோ,
மறுபடி தேர்தல் மகுடி ஊதுறார்.
◨◨◨