கந்தன் கவியமுதம் 7
கவிதை முற்றம் 01 Sep 2026
ஆங்காரத்தால் அந்த பிரம்மன் தானும்
ஆணவத்தால் தான் பெரியன் என்று எண்ணி
நீங்காத பழிதேடி முருகன் தன்னின்
நெடிதான தண்டனையை ஏற்று நின்றான்
ஓங்காரப் பொருள்தன்னை ஈசன் கேட்க
உவப்போடு முருகனவன் தந்தைக்கன்று
பாங்காக உபதேசம் செய்தான் நல்லைப்
பதியினிலே எமக்கருள வந்து நின்றான்.
மலைதன்னைப் பிளந்ததுவும் மாண்பாய் அன்று
மாகடலை வற்றிடவே செய்த வீறும்
நிலைமறந்த சூரனுமே மரமாய் நிற்க
நேர்நின்று அம்மரத்தை வேலால் அன்று
பிளந்தேதான் சேவலொடு மயிலாய் ஆக்கி
பேறுகளைத் தந்தவனாம் நல்லூர்க்கந்தன்
வலம் வந்து வணங்குகிற அடியார் தம்மை
வானுயர்த்தி வரங்கள் பல அருளி நிற்பான்.