நல்லூர் கவி 4
கவிதை முற்றம் 29 Aug 2026
கந்தனது வேல் காணக் கவிதை பொங்கும்
கற்பனைகள் விதம்விதமாய் நெஞ்சில் தங்கும்
செந்தமிழின் சொற்களெலாம் வலிய வந்து
சேர்த்திடுக! எமையுமெனச் சேர்ந்து கெஞ்சும்
அஞ்சலென நல்லூரான் கரங்கள் தூக்க
அத்தனைபேர் மனங்களிலும் அருளே மிஞ்சும்
வெஞ்சமரில் சூரனையே வென்று நின்ற
வேலவனாம் நல்லூரான் வினைகள் தீர்ப்பான்
உலகமெலாம் முருகனவன் பக்தர் கூட்டம்
ஓடித்தான் நல்லூரைக் காண முந்தும்
திலகமெனத் திகழுகிற நல்லூர்க்கந்தன்
திருவிழவைக் காணவென மதங்கள் தாண்டி
பலஇனத்து மனிதரெலாம் பரிந்து வந்து
பரவசமாய் நல்லூரின் வீதி காண்பார்
நலமனைத்தும் பேதங்கள் பார்த்திடாது
நன்மைகளை அனைவருக்கும் முருகன் ஈவான்