இக்கட்டுரை தொடர்பில் நான் முதலாவதாக ஜெயராஜுக்கு சொ...

25 Dec 2015

இக்கட்டுரை தொடர்பில் நான் முதலாவதாக ஜெயராஜுக்கு சொல்ல வருவது யாதெனில், விக்கினேஸ்வரனை முன்மொழிந்ததில் தமிழ் மக்களுக்கு துரோமிழைத்த ஜெயராஜ், தகுந்த ஒருவனை தெரிவு செய்வதற்கு நான் தகுதியற்றவன் என்பதை முதலில் மக்களுக்கு தெரிவித்து, வாழ்நாளில் இன்னொரு தெரிவின்போது எனது மூக்கை நுழைத்து முன்மொழிவுகளை செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டு கொண்டால், அது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பேருதவியாக இருக்கும்.

இயல்பான சண்டைக்குணமும் நிர்வாகத்திறையற்றவர் என்றும் கூறும் ஜெயராஜ் அவர்களே விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்து என்று ஒற்றைக்காலில் நின்றபோது இவர் சண்டைக்குணம் கொண்ட நிர்வாகத்திறனற்றவர் என்பதை அறிந்திருக்கவில்லையா? மேலும் மக்களின் உணர்சியை கிளப்பி, அரசியல் செய்யும் புதுவழியை கண்டு பிடித்துள்ளார் என்று குறிப்பிட்டீர்களே? தமிழ் அரசியல் வாதிகள் காலாகாலமாக மேற்கொண்டு வருகின்ற உணர்ச்சியை கிளப்பும் அரசியல்வழியை விக்னேஸ்வரனும் கடைப்பிடிக்கத்தொடங்கினார் என்றால் பொருத்தமற்றதாகுமா?

மேலும் கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், நிரம்பிய அறமும் அருளும் உடைய அரிய தவ முனிவர்க்கும் சிந்தனை வேறாகிவிடும் என்ற கம்பனின் கூற்றுக்கு விதிவிலக்கில்லாமல் தனது சகாவும் மாறிவிட்டார் என்பதை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் ஜெயராஜ் அதற்கு கூனிகளின் ஆலோசனையால், கைகேயியின் மனம்போல் விக்கினேசுவரனின் மனம் திரிந்தது என்றெல்லாம் பல்வேறு வியாக்கியானங்கள் கூறமுற்படுவது அருவருப்பை உண்டுபண்ணுகின்றது.

தந்தை செல்வா , அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களின் வரிசையில் பிரபாகரன் என்ற உலகப்பயங்கரவாதியும் பாசிஸ்டுவுமான கொலைகாரனை வைத்து மக்களால் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் என்கின்றார் ஜெயராஜ். இவ்வாக்கியமானது ஜெயராஜ் எதை நோக்கி பயணிக்கின்றார் என்பதை தெளிவுறுத்துகின்றது. கம்பன் கழகம் அமைத்து பணம் சம்பாதித்துக்கொண்டிருந்த ஜெயராஜுக்கு பிரபாகரன் மக்களை கொன்றொழித்தமை, அவர்களது உரிமைகளை அப்பட்டமாக மீறியமை, ஆயுதத்தை காட்டி மிரட்டி மக்களது ஜனநாயக உரிமைகளை அப்படியே சூறையாடியமை எவ்வாறு நினைவிருக்கப்போகின்றது? அமிர்தலிங்கத்தை கொன்ற பிரபாகரனை அவரது வரிசையில் வைத்து தலைவர் எனப்போற்றும் இவரின் போக்கிரித்தனம் தமிழ் மக்களுக்கு அடுத்த தலையிடி ஒன்றை உருவாக்கப்போகின்றது என்பதை தெட்டத்தெளிவாக கூறமுடிகின்றது.

ஜெயராஜ் புத்தகம் ஒன்றை பிரபாகரனுக்கு அனுப்பி அதற்கு பிரபாகரன் அனுப்பிய பதில் தொடர்பில் என்னிடம் நிறைய பேச இருக்கின்றது. அது தொடர்பில் விரைவில் விவாதிக்கப்படும்.

தனது கட்டுரையில் பதவியும் பவுசும் வந்ததும் மெல்ல மெல்ல முதலமைச்சர் மாறத்தொடங்கினார் என்றும் அதற்கான காரணங்களையும் எடுத்துரைத்துள்ள இக்கட்டுரையை முடித்துரைத்த ஜெயராஜ், இராஜதுரை மற்றும் கருணா ஆகியோரின் உதாரணங்களை காட்டி, இது சதியா அன்றில் விதியா என்று முடித்துள்ளார்.

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.