கம்பன் விழா போட்டி அறிவித்தல்
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் 2026 ஆம் ஆண்டு கம்பன் விழாவுக்கான இலக்கியப் போட்டிகள்
• அமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்த பேச்சுப் போட்டி.
• அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப் போட்டி.
• அமரர் என். கருணையானந்தன் ஞாபகார்த்த திருக்குறள் மனனப் போட்டி.
• இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப்போட்டி (அனுசரணை இலக்கியப்புரவலர் ஹாஷிம்உமர் அவர்கள்)
அகில இலங்கைக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கொழும்பில் நடாத்திவரும் கம்பன் விழாவிற்கான மேற்படி போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன.
சென்ற ஆண்டுக்கான கம்பன் விழாவினை, நடாத்த முடியாமற்போனதால், சென்ற ஆண்டு போட்டிகளுக்கென விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களும் இவ் ஆண்டுப் போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
புதிதாக இவ்வாண்டுப் போட்டிகளுக்கென விண்ணப்பிப்போர் தமது விண்ணப்பங்களை கீழ் கண்டவகையில் தயாரித்து தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
போட்டிக்கு விண்ணப்பிக்கும் விபரங்கள்
போட்டியாளர்கள் சுயமாகத் தயாரிக்கப் பெற்ற விண்ணப்பப் படிவத்தில் தமது முழுப்பெயர், வயது, பிறந்ததிகதி, முகவரி, தொலைபேசி இலக்கம், மாணவராயின் பாடசாலையின் பெயர், ஆகியவற்றைக் குறிப்பதோடு தாம் கலந்து கொள்ளவுள்ள போட்டி விபரங்களையும் குறிப்பிட்டு, செயலாளர், கொழும்புக் கம்பன் கழகம், இல. 12, இராமகிருஷ்ண தோட்டம், கொழும்பு - 6 (Secretary, Colombo Kamban Kazhakam, 12, Ramakrishna Garden, Colombo - 06.) எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
விரும்பினால் ஒருவரே ஒன்றிற்கு மேற்பட்ட போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம். அங்ஙனம் கலந்து கொள்வதாயின் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் அனுப்பி வைத்தல் வேண்டும்.
கடித உறையின் மேற்பக்க இடதுபுறத்தில், போட்டியாளர் விண்ணப்பிக்கும் போட்டி விபரத்தை எழுதி, படிவங்களை 2026 மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் திகதி போட்டியாளர்களுக்குத் தனித்தனியாகவும் ஊடகங்கள் மூலமும் அறிவிக்கப்படும்.
பாடசாலை மாணவர்களது விண்ணப்பங்களை தனித்தோ, தமிழ் மன்றங்களின் ஊடாகத் தொகுத்தோ அதிபரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைக்கலாம்.
ஏற்கனவே இப்போட்டிகளில் கலந்து தங்கப்பதக்கப் பரிசில்களைப் பெற்றோர் தவிர்ந்த, மற்றையோர் மேற்படி போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
போட்டிகளின் விபரங்கள்
• அமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்த பேச்சுப் போட்டி
மேற்படி பேச்சுப்போட்டி, 02 பிரிவுகளாக நடைபெறுவுள்ளது. மத்திய பிரிவுப் போட்டிகளில் 15 - 17 வயதுக்குட்பட்ட போட்டியாளர்களும், மேற்பிரிவு போட்டிகளில் 18 - 30 வயதிற்குட்பட்ட போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்வோர் உடன் தரப்படும் தலைப்புகளில் தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தவேண்டும்.
தலைப்புக்கள் இலக்கியம், கலை, வாழ்வியல் தொடர்பில் அமைந்திருக்கும்.
• அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப் போட்டி
மேற்படி கவிதைப்போட்டியில் 14 - 35 வயதிற்குட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் பங்குபற்ற விரும்புவோர், “வித்தகக் கம்பனின் சொற்திறம்”, “யாரே முடியக் கண்டார்?”, “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” எனும் தலைப்புக்கள் ஒன்றில் புத்தாக்கக்கவிதை ஒன்றை ஆக்கி, மேலே தரப்பட்டுள்ள கழகத்தின் முகவரிக்கு 10.03.2026க்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எழுதப்படும் கவிதை எவ்வடிவத்திலும் அமையலாம். தரமானதாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பத்துக் கவிதைகளை எழுதியவர்கள், இறுதிச் சுற்றுப்போட்டிக்காக நேரே அழைக்கப்படுவார்கள்.
• அமரர் என். கருணையானந்தன் ஞாபகார்த்த திருக்குறள் மனனப் போட்டி
மேற்படி போட்டி, ஒரே பிரிவாக மட்டும் நடைபெறும். இப்போட்டியில் தரம் 6 முதல் 9 வரையான வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்வோர் திருக்குறள் பொருட்பாலின் “அரசியலில்” உள்ள “இறைமாட்சி” முதல் “வலியறிதல்” வரையிலான பத்து அதிகாரங்களை (100 குறள்கள்) மனனம் செய்வதோடு அக்குறள்களுக்கான பொருளறிவையும் பெற்றிருத்தல் வேண்டும்.
• இஸ்லாமிய இலக்கியப் போட்டி (அனுசரணை இலக்கியப்புரவலர் ஹாஷிம்உமர் அவர்கள்)
“இஸ்லாமிய தமிழிலக்கியப் பேச்சுப் போட்டியில்” பாடசாலை மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். இப்போட்டி ஒரே பிரிவாக மட்டுமே இடம்பெறும். இப்போட்டியில் கலந்து கொள்வோர், கீழே வழங்கப்பட்டுள்ள தலைப்புக்கள் ஏதேனும் ஒன்றில் தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தவேண்டும்.
1. உமறுப்புலவரின் கவித்துவம்.
2. ம. மு. உவைசின் தமிழ்ப்பணி.
3. “கவிக்கோ” அப்துல் ரகுமானின் சிந்தனைகள்.
4. இஸ்லாமியம் காட்டும் வாழ்க்கைநெறி.
போட்டி முடிவுகள் பற்றிய விபரங்கள்
போட்டிகளில் நடுவர் குழுவினரின் தீர்ப்பே இறுதியானதாகும். நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்படும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கும் நடைபெறவுள்ள கம்பன் விழாவில் தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்படும்.
போட்டிகளில் அதிகூடிய இயல்பாளுமையை வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் கம்பன் விழா நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் கொழும்புக் கம்பன் கழகம் அறிவித்துள்ளது.