ஆகமம் அறிவோம் | பகுதி 2

ஆகமம் அறிவோம் | பகுதி 2
 
சிவாகமங்கள் பற்றிய விபரங்கள்

ங்களில் பலபேருக்கு,
இந்தவாரக் கட்டுரை,
கடுமையாய் ‘போர்’அடிக்கப்போகிறது.
காரணம் வேறொன்றுமில்லை.
நம் சமய நூல்கள் கூறும்,
ஆகமம் பற்றிய பல செய்திகளை,
இந்தவாரம் தொகுத்துத் தரப்போகிறேன்.
இம்முறை ஆச்சாரிய இலட்சணம் பற்றி,
எழுதப் போவதாய்ச் சொல்லியிருந்தேன்.
அதற்கு முன்னராக,
இச்செய்திகளை நாம் அறியவேண்டியது அவசியம்.
அடுத்த வாரத்திலிருந்து,
உங்கள் எதிர்பார்ப்புக்களை இக்கட்டுரை,
திருப்தி செய்யும் என நம்புகிறேன்.
 




உயர்ந்த நம் ஆகமங்கள் பற்றி,
நான் எழுதும் கட்டுரைத் தொடருக்கு,
எதிர்ப்புகள் வரலாம் என நினைந்தேன்.
ஆனால் பலரும் அதனை வரவேற்று,
கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒருசில அந்தணர்களும்கூட,
தம் ஆர்வத்தைத் தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளனர்.
அவர் தமக்கு என் நன்றிகள்.



ஆகமங்கள் தோன்றிய முறை

சதாசிவமூர்த்தியின் ஐந்து திருமுகங்களிலிருந்தும்,
ஆகமங்கள் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறது.
மகாசங்காரத்தின் முடிவில்,
(மகாசங்காரம் என்பது பிரபஞ்சம் முழுவதையும்,
இறைவன் ஒடுக்கி வைத்திருக்கும் காலம்.)
உலகங்களை மீளப் படைக்க,
பரமசிவனார் திருவுளம் கொண்டார்.
அப்போது அவருடைய பராசக்தியானவர்,
சுத்தமாயையை நோக்கிய பொழுது,
வேத, ஆகமங்கள்,
சுத்தமாயையிலிருந்து நாதவடிவாயும்,
பின் பிந்து வடிவாயும்,
பின் அட்சரவடிவாயும் தோன்றினவாம்.




ஆகம உபதேச வரலாறு

இந்த ஆகமங்கள்,
சதாசிவனால் -அனந்தேசுரருக்கும்  (பரசம்பந்தம்)
அனந்தேசுரரால் -ஸ்ரீகண்டருக்கும்  (மகாசம்பந்தம்)
ஸ்ரீகண்டரால் -தேவர்களுக்கும் (அந்தராள சம்பந்தம்)
தேவர்களால்   -முனிவர்களுக்கும் (திவ்விய சம்பந்தம்)
முனிவர்களால் - மானுடர்க்கும் (அதிவ்விய சம்பந்தம்)
உபதேசிக்கப்பட்டனவாம்.



ஐந்து முகங்களில் தோன்றிய ஆகமங்கள்

சதாசிவ மூர்த்திக்கு,
ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என,
ஐந்த முகங்கள் உள்ளன.
சதாசிவமூர்த்தியின் அவ் ஐந்து முகங்களிலிருந்தே,
ஆகமங்கள் தோற்றம் பெற்றன.



சத்தியோசாத முகத்தில் தோன்றிய ஆகமங்கள்

சதாசிவ மூர்த்தியினுடைய,
சத்தியோசாத முகத்திலிருந்து,
கௌசிக முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட,
ஐந்து ஆகமங்கள் பின்வருமாறு.

1. காமிகம்
2. யோகசம்
3. சிந்தியம்
4. காரணம்
5. அசிதம்



வாமதேவ  முகத்தில் தோன்றிய ஆகமங்கள்

சதாசிவ மூர்த்தியினுடைய,
வாமதேவ முகத்திலிருந்து,
காசிப முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட,
ஐந்து ஆகமங்கள் பின்வருமாறு.

6. தீப்தம்
7. சூக்குமம்
8. ஸஹஸ்ரம்
9. அஞ்சுமான்
10. சுப்பிரபேதம்



அகோர முகத்தில் தோன்றிய ஆகமங்கள்

சதாசிவ மூர்த்தியினுடைய,
அகோர முகத்திலிருந்து,
பரத்துவாச முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட,
ஐந்து ஆகமங்கள் பின்வருமாறு.

11. விசயம்
12. நீச்சுவாசம்
13. சுவயம்புவம்
14. ஆக்நேயம்
15. வீரம்



தற்புருட  முகத்தில் தோன்றிய ஆகமங்கள்

சதாசிவ மூர்த்தியினுடைய,
தற்புருட முகத்திலிருந்து,
கௌதம முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட,
ஐந்து ஆகமங்கள் பின்வருமாறு.

16. ரௌரவம்
17. மகுடம்
18. விமலம்
19. சந்திரஞானம்
20. முகவிம்பம்



ஈசான  முகத்தில் தோன்றிய ஆகமங்கள்

சதாசிவ மூர்த்தியினுடைய,
ஈசான முகத்திலிருந்து,
அகத்திய முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட,
எட்டு ஆகமங்கள் பின்வருமாறு.

21. புரோத்கீதம்
22. லளிதம்
23. சித்தம்
24. சந்தானம்
25. சர்வோக்தம்
26. பாரமேசுவரம்
27. கிரணம்
28. வாதுளம்



ஆகமங்களில் சிவபேதம்

இவ் 28 ஆகமங்களுள் காமிகம் முதல் சுப்பிரபேதம் வரையான பத்தும்,
ஆன்மாக்களுள் ஒருமலம் மட்டும் உடைய விஞ்ஞானகலருள்,
பரமசிவனது அனுக்கிரகத்தைப் பெற்ற,
‘பிரணவர்’ முதலிய பத்துச் சிவன்களுக்கும்,
அருளிச் செய்யப்பட்டமையால் அவை சிவபேதம் எனப்படும்.



ஆகமங்களில் உருத்திரபேதம்

மிகுதியாய் இருக்கும் ஆகமங்களாகிய,
விசயம் முதல் வாதுளம் வரையான பதினெட்டும்,
பரமசிவன்பால் உபதேசம் பெற்ற,
அனாதி உருத்திரர் முதலிய,
பதினெட்டு உருத்திரர்களுக்கும்,
அருளிச் செய்யப்பட்டமையால்,
அவை உருத்திரபேதம் எனப்படும்.



ஆகமங்களின்  மறுபெயர்கள்

சித்தாந்தம், மாந்திரம், தந்திரம் என்பவை,
ஆகமங்களுக்கான மறுபெயர்கள்.



சிவாகமங்களின் பகுதிகள்

சிவாகமங்கள் ஒவ்வொன்றும்,
நான்கு பகுதிகளைக் கொண்டவை.
முதற்பகுதி -கோயில் வழிபாடு பற்றியது.
இரண்டாம் பகுதி -கோயில் கட்டும் முறை, அதைக் கடவுளுக்கு ஆக்கும் முறை, நித்திய,நைமித்திய பூசை விதி, பரிகாரங்கள் என்பவை பற்றியது.
மூன்றாம் பகுதி -தியானமுறை, யோகமுறை ஆகியவற்றைப் பற்றியது.
நான்காம் பகுதி -முத்தி பெறுவதற்குரிய ஞானநெறிகளைக் கூறுவது.



ஆகம பாதங்கள்

சிவாகமங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி,
சரியாபாதம்
கிரியாபாதம்
யோகபாதம்
ஞானபாதம் என நான்கு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளன.



சரியா பாத உள்ளடக்கம்

ஆகமங்களின் சரியா பாதத்தில்  
பிராயச்சித்த விதி
பவித்திர விதி
சிவலிங்க லட்சணம்
செபமாலை
யோகப்பட்டம் முதலியவற்றின்,
இலட்சணங்கள் அமைந்திருக்கும்.



கிரியா பாத உள்ளடக்கம்

ஆகமங்களின் கிரியா பாதத்தில்    
மந்திரங்களின் உத்தாரம்
சந்தியாவந்தனம்
பூசை
செப ஓமங்கள்
சமய, விசேட, நிர்வாண, ஆச்சாரிய அபிசேகங்கள்
ஆகியவற்றின் விபரங்கள்,
முதலியவை அமைந்திருக்கும்.



யோக பாத உள்ளடக்கம்

ஆகமங்களின் யோக பாதத்தில்
36 தத்துவங்கள்
தத்துவேசுரர்
இயம, நியம, ஆசன சமாதி முறை ஆகியவற்றின்,
விபரங்கள் அமைந்திருக்கும்.



ஞான பாத உள்ளடக்கம்

ஆகமங்களின் ஞான பாதத்தில்,
பதி, பசு, பாச இலட்சணங்கள்,
சொல்லப்பட்டிருக்கும்.
இவையே ஆகமங்களின்,
நால்வகைப் பிரிப்பு முறையாம்.



உப ஆகமங்களின்  விபரம்

மூலாகமங்கள் இருபத்தெட்டுக்கும்,
தனித்தனி உபாகமங்கள் உள்ளன.
அவை பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன.




1. காமிக ஆகமம்-கேட்டோர்

சிவபேத ஆகமங்களுள் முதலாவதான காமிக ஆகமம்,
உத்தர காமிக ஆகமம், பூர்வ காமிக ஆகமம்,
என இரண்டாகப் பிரியும்.
இதனைக் கேட்டோர், பிரணவர், திரகலர், கரர் ஆகியோர்.

2. யோகச ஆகமம்-கேட்டோர்

இரண்டாவதான யோகச ஆகமம்.
இதனைக் கேட்டோர் சுதர் முதலியோர்.

3. சிந்திய ஆகமம்-கேட்டோர்

மூன்றாவதான சிந்திய ஆகமம்.
இதனைக் கேட்டோர் சுதீப்தர் முதலியோர்.

4. காரண ஆகமம்-கேட்டோர்

நான்காவதான காரண ஆகமம்
இதனைக் கேட்டோர் காரணர் முதலியோர்.

5. அசித ஆகமம்-கேட்டோர்

ஐந்தாவதான அசித ஆகமம்.
இதனைக் கேட்டோர் சுசிவர் முதலியோர்.

6. தீப்த ஆகமம்-கேட்டோர்

ஆறாவதான தீப்த ஆகமம்.
இதனைக் கேட்டோர் ஈசர் முதலிய மூவர்.

7. சூக்ஷ்ம ஆகமம்-கேட்டோர்

ஏழாவதான சூக்ஷம ஆகமம்.
இதனைக் கேட்டோர் சூக்ஷ்மர் முதலிய மூவர்.

8. சகச்சர  ஆகமம்-கேட்டோர்

எட்டாவதான சகச்சர ஆகமம்.
இதனைக் கேட்டோர் காலர் முதலிய மூவர்.

9. அம்சுமான் ஆகமம்-கேட்டோர்

ஒன்பதாவதான அம்சுமான் ஆகமம்.
இதனைக் கேட்டோர் அம்பு முதலிய மூவர்.

10. சுப்ரபேத ஆகமம்-கேட்டோர்

பத்தாவதான சுப்ரபேத ஆகமம்.
இதனைக் கேட்டோர் தசேசர் முதலிய மூவர்.

11. விஜயா ஆகமம்-கேட்டோர்

விஜயா ஆகமம்.
இதனைக் கேட்டோர் அனாதி, ருத்திரர் முதலிய இருவர்.

12. நிச்வாச  ஆகமம்-கேட்டோர்

நிச்வாச ஆகமம்.
இதனைக் கேட்டோர் தாசாரணர் முதலிய இருவர்.

13. சுவயம்பு  ஆகமம்-கேட்டோர்

சுவயம்பு ஆகமம்.
இதனைக் கேட்டோர் நிதநேசர் முதலிய இருவர்.

14. ஆக்நேயம்  ஆகமம்-கேட்டோர்

ஆக்நேயம் ஆகமம்.
இதனைக் கேட்டோர் வியோமர் முதலிய இருவர்.

15. வீர ஆகமம்-கேட்டோர்

வீர ஆகமம்.
இதனைக் கேட்டோர் தேசசு முதலிய இருவர்.

16. ரௌரவ ஆகமம்-கேட்டோர்

ரௌரவ ஆகமம்.
இதனைக் கேட்டோர் பிராமணேசர் முதலிய இருவர்.

17. மகுட  ஆகமம்-கேட்டோர்

மகுட ஆகமம்.
இதனைக் கேட்டோர் சிவர் முதலிய இருவர்.

18. விமல ஆகமம்-கேட்டோர்

விமல ஆகமம்.
இதனைக் கேட்டோர் சர்வாத்மகர் முதலிய இருவர்.

19. சந்திரஞான  ஆகமம்-கேட்டோர்

சந்திரஞான ஆகமம்.
இதனைக் கேட்டோர் அநந்தர் முதலிய இருவர்.

20. முகபிம்ப  ஆகமம்-கேட்டோர்

முகபிம்ப ஆகமம்.
இதனைக் கேட்டோர் பிலசாந்தர் முதலிய இருவர்.
இதன் உபாகமங்கள்
சதுர்முகம் முதலிய பதினைந்து.

21. ப்ரோத்கீத  ஆகமம்-கேட்டோர்

ப்ரோத்கீத ஆகமம்.
இதனைக் கேட்டோர் சூலி முதலிய இருவர்.

22. லளித  ஆகமம்-கேட்டோர்

லளித ஆகமம்.
இதனைக் கேட்டோர் ஆலயேசர் முதலிய இருவர்.

23. சித்த  ஆகமம்-கேட்டோர்-உபாகமங்கள்

சித்த ஆகமம்.
இதனைக் கேட்டோர் பிந்து முதலிய இருவர்.

24. சந்தான  ஆகமம்-கேட்டோர்

சந்தான ஆகமம் .
இதனைக் கேட்டோர் சிவநிஷ்டர் முதலிய இருவர்.

25. சர்வோத்தம  ஆகமம்-கேட்டோர்

சர்வோத்தம ஆகமம்.
இதனைக் கேட்டோர் சோமர் முதலிய இருவர்.

26. பாரமேச்வர  ஆகமம்-கேட்டோர்

பாரமேச்வர ஆகமம்.
இதனைக் கேட்டோர் ஸ்ரீதேவி முதலிய இருவர்.

27. கிரண  ஆகமம்-கேட்டோர்

கிரண ஆகமம்.
இதனைக் கேட்டோர் தேவவிபவர் முதலிய இருவர்.

28. வாதுள  ஆகமம்-கேட்டோர்

வாதுள ஆகமம்.
இதனைக் கேட்டோர் சிவர் முதலிய இருவர்.



மூல ஆகமங்களும் அவற்றின் உப ஆகமங்களும்

1. காமிகத்திற்கு உபாகமம் 3:-
வக்தாரம், பைரவோத்தரம், நாரசிம்மம் (மிருகேந்திரம்).
2. யோகஜத்திற்கு உபாகமம் 5:-
தாரம்,வீணாசிகோத்ரம், ஆத்மயோகம், ஸந்தம், ஸந்ததி.
3. சிந்தியத்திற்கு உபாகமம் 6:-
சுசிந்தியம்,சுபகம், வாமம், பாபநாசம், பரோத்பவம், அம்ருதம்.
4. காரணத்திற்கு உபாகமம் 7:-
காரணம்,வித்வேஷம், பாவனம், மாரணம், தௌர்கம், மாஹேந்திரம், பீனஸம்ஹிதை.
5. அஜிதத்திற்கு உபாகமம் 4:-
பிரபூதம்,பரோத்பூதம், பார்வதீஸம்ஹிதை, பத்மஸம்ஹிதை.
6. தீப்தத்திற்கு உபாகமம் 9:-
அமேயம், சப்தம்,ஆச்சாத்தியம், அஸங்கியம், அமிருதோஜஸம், ஆனந்தம், மாதவோத்பூதம், அற்புதம், அக்ஷயம்.
7. சூட்சுமத்திற்கு உபாகமம் 1:-
சூட்சுமம்.
8. சகஸ்ரத்திற்கு உபாகமம் 10:-
அதீதம்,மங்கலம், சுத்தம், அப்ரமேயம், ஜாதிபாக்கு, பிரபுத்தம், விபுதம், அஸ்தம், அலங்காரம், சுபோதம்.
9. அம்சுமானுக்கு உபாகமம் 12:-
வித்தியாபுராணம், தந்திரம், வாஸவம், நீலலோகிதம், பிரகரணம், பூததந்திரம், ஆத்மாலங்காரம், காசியபம்,கௌதமம், ஐந்திரம், பிராமம், வாசிட்டம், ஈசானோத்தரம்.
10. சுப்பிரபேதத்திற்கு உபாகமம் 1:-
சுப்பிரபேதம்.
11. விசயத்திற்கு உபாகமம் 8:-
உற்பவம்,சௌமியம், அகோரம், மிருத்யுநாசனம், கௌபேரம், மகாகோரம், விமலம், விசயம்.
12. நிசுவாசத்திற்கு உபாகமம் 8:-
நிசுவாசம்,நிசுவாசோத்தரம், நிசுவாச சுகோதயம், நிசுவாச நயனம், நிசுவாச காரிகை, நிசுவாச கோரம், நிசுவாசகுய்யம், மந்திர நிசுவாசம்.
13. சுவாயம்புவத்திற்கு உபாகமம் 3:-
பிரஜாபதி மதம், பதுமம், நளினோற்பவம்.
14. ஆக்னேயத்திற்கு உபாகமம் 1:-
ஆக்கினேயம்.
15. வீரத்திற்கு உபாகமம் 13:-
பிரஸ்தரம்,புல்லம், அமலம், பிரபோதகம், அமோகம், மோகசமயம், சகடம், சகடாதிகம், பத்திரம்,விலேகனம், வீரம், அலம், போதகம்.
16. இரௌரவத்திற்கு உபாகமம் 6:-
காலாக்கியம்,காலதகனம்,இரௌரவம், இரௌரவோத்தரம், மகாகாலமதம், ஐந்திரம்.
17. மகுடத்திற்கு உபாகமம் 2:-
மகுடம், மகுடோத்தரம்.
18. விமலத்திற்கு உபாகமம் 16:-
அனந்தம், போகம், ஆக்கிராந்தம், இருடபிங்கம், இருடோதரம், இருடோற்பூதம், இரௌத்திரம், சூதந்தம், தாரணம்ஆரேவதம், அதிக்கிராந்தம், அட்டகாசம், பத்திரவிதம், அர்ச்சிதம், அலங்கிருதம், விமலம்.
19. சந்திரஞானத்திற்கு உபாகமம் 14:-
ஸ்திரம், ஸ்தாணு,மகாந்தம், வாருணம், நந்திகேசுரம், ஏகபாதபுராணம், சாங்கரம், நீலருத்திரகம், சிவபத்திரம், கற்பபேதம், சீமுகம், சிவசாசனம், சிவசேகரம், தேவீமதம்.
20. முக விம்பத்திற்கு உபாகமம் 15:-
சதுமுகம், சமத்தோபம், பிரதிபிம்பம், அயோகஜம், ஆன்மாலங்காரம், வாயவியம், பட்டசேகரம், தௌடிகம், துடிநீரகம், குட்டிமம், துலாயோகம், காலாத்தியயம், மகாசௌரம், நைருதம், மகாவித்தை.
21. புரோத்கீதத்திற்கு உபாகமம் 16:-  
வாராகம், கவசம், பாசபந்தம், பிங்கலாமதம், அங்குசம், தண்டதரம், தனுதரம், சிவஞானம், விஞ்ஞானம், சீகாலஞானம், ஆயுர்வேதம், தனுர்வேதம், சர்பதம், ஷ்டரவிபேதனம், கீதகம், பரதம், ஆதோத்தியம்.
22. இலளிதத்திற்கு உபாகமம் 3:-
இலளிதம், இலளிதோத்தரம், கௌமாரம்.
23. சித்தத்திற்கு உபாகமம் 4:-
சாரோத்தரம், ஒளசனசம், சாலாபேதம், சசிமண்டலம்.
24. சந்தானத்திற்கு உபாகமம் 7:-
இலிங்காதியட்சம், சுராத்தியட்சம், அமரேசுரம், சங்கரம், அசங்கியம், அனிலம், துவந்தம்.
25. சர்வோக்தத்திற்கு உபாகமம் 5:-
சிவதருமோத்தரம், வாயுப்புரோத்தம், திவ்வியப்புரோத்தம், ஈசானம், சருவோற்கீதம்.
26. பாரமேசுரத்திற்கு உபாகமம் 7:-
மாதங்கம், யட்சணிபதுமம், பாரமேசுரம், புட்கரம், (பௌட்கரம்) சுப்பிரயோகம், அமிசம், சாமானியம்.
27. கிரணத்திற்கு உபாகமம் 9:-
காருடம், நைருதம், நீலம், இரூட்சம், பானுகம், தேனுகம், காலாக்கியம், பிரபுத்தம், புத்தம்.
28. வாதுளத்திற்கு உபாகமம் 12:-
வாதுளம், வாதுளோத்தரம், காலஞானம், பிரரோகிதம், சருவம், தருமாத்மகம், நித்தியம், சிரேட்டம், சுத்தம், மகானனம், விசுவம், விசுவான்மகம்.
ஆக உபாகமங்கள் இருநூற்றேழு - 207



ஆகமங்களில் சிவபேதம் கேட்டோர் பரம்பரைகள்

சதாசிவர் பிரணவருக்கும் அங்கிருந்து பரம்பரையாக திரிகலர், சுரர், சுதர், பஷ்மர், விபு, சுதீப்தர், கோபதி, அம்பிகை, காரணர், சர்வருத்திரர், பிரஜாபதி, சுகிவர், சிவர், அச்சுதர், ஈசர், ஈசானர், உதாசனர், சூக்ஷ்மர், வைச்சரவனர், பிரபஞ்சனர், காலர், பீமர், தர்மர், அம்பு, சுக்தர், ரவி, தசேசர், விக்னேச்வரர், சசி ஆகியோர்.

ஆகமங்களில் ருத்ரபேதம் கேட்டோர் பரம்பரைகள்

அநாதிருத்தரர், பரமேசர், தசார்ணர், சைவசர், நிதநேசர், பிரமர், வ்யோமர், உதாசநர், தேஜசு, ப்ரஜாபதி, ப்ராம்மணேசர், நந்திகேசர், சிவர், மகாதேவர், சர்வாத்மகர், வீரபத்ரர், அநந்தர், பிரகஸ்பதி, பிரசாந்தர், ததீசி, சூலி, கவசர், ஆலயேசர், லளிதர், பிந்து, சண்டிகேசர், சிவநிஷ்டர், அசம்வாயர், சோமர், நிருசிம்மர், ஸ்ரீதேவி, உசனர், தேவவிபவர், சம்வர்த்தகர், சிவர், மகாகாளர் ஆகியோர்.



இறை உறுப்புக்களாய் ஆகம வர்ணனை

சிவனது மேல் நோக்கிய சிரசின் மகுடம் காமிக ஆகமம் என்றும்,
தற்புருஷ சிரசின்  மகுடம் யோகஜ ஆகமம் என்றும்,
அகோர சிரசின் மகுடம் சிந்த்ய ஆகமம் என்றும்,
வாமதேவ சிரசின் மகுடம் காரண ஆகமம் என்றும்,
ஸத்யோசாத சிரசின் மகுடம் அஜித ஆகமம் என்றும்,
ஈசான முகம் தீப்த ஆகமம் என்றும்,
தற்புருஷ முகம் சூக்ஷ்ம ஆகமம் என்றும்,
தக்ஷிண முகம் ஸஹஸ்ர ஆகமம் என்றும்,
வாமதேவ முகம் அம்சுமான ஆகமம் என்றும்,
ஸத்யோசாத முகம் சுப்ரபேத ஆகமம் என்றும்,
காது விஜய ஆகமம் என்றும்,
கழுத்து நிச்வாஸ ஆகமம் என்றும்,
இருதயம் ஸ்வாயம்புவ ஆகமம் என்றும்,
நாபி அனல் ஆகமம் என்றும்,
இடுப்பு வீர ஆகமம் என்றும்,
ப்ருஷ்டபாகம் ரௌரவ ஆகமம் என்றும்,
வலது தொடை மகுட ஆகமம் என்றும்,
இடது தொடை விமல ஆகமம் என்றும்,
இடது தொடையின் நுனிப்பாகம் சந்திரக்ஞான ஆகமம் என்றும்,
வலது தொடையின் நுனிப்பாகம் பிம்ப ஆகமம் என்றும்,
வலது முழந்தால் சில்லு ப்ரோத்கீத ஆகமம் என்றும்,
இடது முழந்தால் சில்லு லலித ஆகமம் என்றும்,
வலது முழங்கால் சித்த ஆகமம் என்றும்,
இடது முழங்கால் சந்தான ஆகமம் என்றும்,
வலது முழங்காலின் நுனிப்பாகம் சார்வோர்த்த ஆகமம் என்றும்,
இடது முழங்காலின் நுனிப்பாகம் பாரமேஸ்வர ஆகமம் என்றும்,
வலதுபாத தளப்பாகம் கிரண ஆகமம் என்றும்,
இடதுபாத தளப்பாகம் வாதுள ஆகமம் என்றும்,
இறைவனது உறுப்புக்களாய் ஆகமங்களை,
உத்தரகாமிக ஆகமம் வர்ணிக்கிறது.



காரண ஆகமம், காமிக ஆகமம், மகுட ஆகமம்,
வாதுள ஆகமம், சுப்ரபேத ஆகமம் ஆகியவை மட்டுமே.
தற்போது நடைமுறையிலுள்ள சைவ ஆகமங்களாம்.



அவற்றுள்ளும் காமிக ஆகமம், காரண ஆகமம்
ஆகிய இரண்டும் மட்டுமே மிகுதியாகப் பின்பற்றப்படுகின்றன.
காமிக ஆகமமே மிகப்பெரும்பாலான சைவக்கோயில்களில் பின்பற்றப்படுகிறது.
காரண ஆகமம் சில கோயில்களில் மட்டுமே பின்பற்றப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டும் மகுட ஆகமம் பின்பற்றப்படுகிறது.
முருகன் கோயில்களில் காரண ஆகமமும், குமாரதந்திரமும் பின்பற்றப்படுகின்றன.



ஆகமங்களின் சார்பு நூல்கள்

மூல ஆகமங்களிலும் உபாகமங்களிலுள்ள,
ஞானபாதக் கருத்துக்களில் சிலவற்றைத் தொகுத்தும்,
சிலவற்றை விளக்கியும் எழுதப்பட்ட எட்டு நூல்கள்,
ஆகமங்களின் சார்புநூல்களாய்க் கருதப்படுகின்றன.
இவ் எட்டு நூல்களையும் ‘அஷ்டப் பிரகரணம்’ என்பர்.
இவ் எட்டு நூல்களின் நூலாசிரியர்கள் அனைவரும்,
கஷ்மீர் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அந்நூல்களினதும், நூலாசிரியர்களினதும் பெயர்கள் பின்வருமாறு:-
1. தத்துவப் பிரகாசிகை -போசதேவர்.
2. தத்துவ சங்கிரகம் -சத்ததியோசோதி
3. தத்துவத்திரய நிர்ணயம் -சத்தியசோதி
4. இரத்தினத் திரயம் -ஸ்ரீகண்டர்
5. போக காரிகை -சத்தியோசோதி
6. நாத காரிகை -பட்டராமகண்டர்
7. மோட்ச காரிகை - சத்தியோசோதி
8. பரமோட்சநிராச காரிகை - சத்தியோசோதி



பத்ததிகள்

ஆகமங்களின் சரியா, கிரியா பாதங்களாகிய,
இரண்டு பகுதிகளிலும் கூறப்படும் கருத்துக்களை,
ஆதாரமாகக் கொண்டு இயற்றப்பட்டவை,
பத்ததி நூல்கள் எனப்படும்.
இவற்றில் ஞானபாதக் கருத்துக்கள் இடம்பெறவில்லை.
ஆலயங்களில் நிகழ்த்தப்பெறும்,
விழாக்கள், கும்பாபிஷேகம் முதலான நிகழ்ச்சிகள் பற்றியும்,
சிவபூசை விதி பற்றியும் அறிந்து கொள்வதற்கும்,
அவற்றைச் செய்வதற்குமான விதிகள் இவற்றில் கூறப்பட்டுள்ளன.
பத்ததி நூல்கள் பதினெட்டாகும்.
பத்ததி, வழி, நெறி, மார்க்கம், அத்துவா என்பன,
ஒரு பொருட்சொற்களாகும்.
பத்ததிகளை இயற்றியோர் பெயர்கள் பின்வருமாறு:-

1. துர்வாச சிவர்
2. பைங்கள சிவர்
3. உக்கிரசோதி
4. ஸ்ரீகண்டர்
5. விஷ்ணுகண்டர்
6. சுபோதர்
7. வித்தியாகண்டர்
8. ராமகண்டர்
9. ஞான சிவர்
10. ஞான சங்கரர்
11. சோமசம்பு
12. பிரம்மசம்பு
13. திரிலோசன சிவர்
14. அகோர சிவர்
15. வருண சிவர்
16. பிரசாத சிவர்
17. ராமநாத சிவர்
18. ஈசான சிவர்


இவைதவிர காசியம் பதியைச் சேர்ந்த,
பஞ்சாக்கிரக யோகிகளால் இயற்றப்பட்ட,
சைவபூசணம் என்ற நூலும்,
திரிலோசன சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட,
சித்தாந்த சாராவளி என்ற நூலும்,
சிவாக்கிரம யோகிகளால் இயற்றப்பட்ட,
கிரியா தீபிகை என்ற நூலும்,
சிவாகமச்சார்பு நூல்களேயாம்.



சிவாகமத்தொகுப்பு நூல்கள்

சிவாகமங்களின் ஞானபாதப் பகுதியிலுள்ள,
சுலோகங்களைத் தொகுத்து,
உமாபதிசிவாச்சாரியார் அவர்கள்,
சதரத்தின சங்கிரகம் என்ற நூலை ஆக்கியுள்ளார்.
கிரணம், மதங்கம், மிருகேந்திரம், நிசுவாசம், பராக்கியை,
சுவாயம்புவம், சர்வஞானோத்திரம்,
விசுவசாரோத்திரம், காலோத்திரம் முதலான,
ஆகமங்களிலிருந்து நூறு சுலோகங்கள்,
இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளதாலேயே,
இந்நூட்கு சதரத்திணசங்கிரகம் எனும் பெயரிடப்பட்டுள்ளது.
(சதம்-நூறு)
இந்நூலை துறைமங்களம் சிவப்பிரகாச சுவாமிகள்,
சதமணிமாலை என்ற பெயரிட்டு தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இதைவிட,
வேதஞானர் என்பவர் இயற்றிய,
சைவாகம பரிபாஷா மஞ்சரி எனும் நூலும்,
இந்நூலில் ஆகமக் கருத்துக்கள்,
பத்து வர்க்கங்கள் வரை தொகுக்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள முதலாவது வர்க்கத்தில்,
ஒவ்வொன்றாக உள்ள விடயங்களும்,
இரண்டாவது வர்க்கத்தில்,
இவ்விரண்டாக உள்ள விடயங்களும்,
பத்தாவது வர்க்கத்தில்,
வாயு, நாடி, ஓமம் முதலிய பத்துப்பத்தாகவுள்ள விடயங்களும்,
தொகுக்கப்பட்டுள்ளன.
இவை தவிர,
திருமூலர் அருளிய திருமந்திரம்,
ஒன்பது ஆகமங்களின் சாராமாகவும்,
வாகீச முனிவரால் இயற்றப்பட்ட,
ஞானாமிருதம் எனும் நூல்,
கிரணாகமத்தின் சாரமாகவும் விளங்குகின்றன.
மற்றும்,
சிதம்பரம் மறைஞானசம்பந்தனின்,
சைவசமய நெறி எனும் நூலும்,
தத்துவப்பிரகாசரின்
தத்துவப்பிரகாசம் எனும் நூலும்,
பதினான்கு சித்தாந்த நூல்களும்,
சிவாகமங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன.
தொடரும்..
(அடுத்தவாரம் ஆச்சாரிய இலட்சணம் பற்றி அறிவோம்.)

 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.