ஓ! மந்தை? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

ஓ! மந்தை? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
ற்சாகமாய் மீண்டும் ஒரு பட்டிமண்டபம் தொடங்கியிருக்கிறது.
நடத்துகிறவர்கள் இலக்கியவாதிகள் அல்லர் அரசியல்வாதிகள்.
அரசின் பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்டியது
‘தாண்டிக்குளத்திலா? ஓமந்தையிலா?’ என்பதுவே
இம்முறை விவாதத் தலைப்பாகியிருக்கிறது.
இப்பட்டிமண்டபம், மாகாணசபை அளவில் நடந்து முடிந்து,
சம்பந்தனாரிடம் மேன்முறையீட்டிற்குச் சென்றிருக்கிறது.
அவரோ வழமைபோலவே, உறுதியாய்த் தீர்ப்புரைக்காமல்,
அனைத்தையும் காலம் கனிவிக்கும் என்னும்
தனது வழக்கமான தத்துவத்தின்படி
அதுவும் சரி, இதுவும் சரி என்னுமாப்போல் ‘சலாப்பி’
தீர்ப்பினை இழுத்தடித்திருக்கிறார்.
இவ்விவாதங்களால் இன ஒற்றுமை சிதைவதை அறியாமல்
பட்டிமண்டபங்களில் இருஅணிக்கும் கைதட்டிப் பழகிய நம் தமிழ் மக்கள்,
இவ்விடயத்திலும் அணி பிரிந்து கைதட்டி மகிழ்ந்து நிற்கின்றனர்.
 



இப்பட்டிமண்டபத்தில் அணி பிரிந்து மோதுவது வடமாகாணசபையின்,
ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியுமல்ல என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம்.
வழமைபோலவே, இம்முறையும் ஆளுங்கட்சியே அணி பிரிந்து மோதுகிறது.
ஆளுங்கட்சிக்குள்ளேயே  நடக்கும் பட்டிமண்டபங்களின் வரிசையில்,
இந்தத் தலைப்பிற்கு ஆறாவதோ, ஏழாவதோ இடம்.
மாகாணசபையில் எதிர்க்கட்சியினர்,
எங்களுக்கு வேலையே இல்லையா? என ஏங்கி
கொட்டாவி விட்டுக் குதூகலித்து நிற்கின்றனர்.
தமிழர் என்று ஒரு இனம் ! தனியே அவர்க்கு இது குணம் !



முதலில் இப்பிரச்சினை பற்றி,
வாசகர்களுக்குச் சிறியதொரு முன்னோட்டம்.

மத்திய அரசு தனது வரவுசெலவுத்திட்டத்தில்,
நுவரெலியா, தம்புல்ல ஆகிய இடங்களிலிருப்பது போன்ற,
ஒரு பொருளாதார மையத்தை வடக்கிலும் உருவாக்கி,
விவசாய, பண்ணை உற்பத்திப் பொருட்களை,
தகுந்த விலையில் உற்பத்தியாளர்களிடம் பெறவும்,
குறைந்த விலையில் நுகர்வோருக்குத் தரவும் என,
இருநூறு கோடி ரூபாவை ஒதுக்கியது.



இப் பொருளாதார மையத்தை அமைக்கவென,
இடம் தேடத் தொடங்கியது மத்திய அரசு.
அதற்குப் பொருத்தமான இடங்களைச் சிபாரிசு செய்யும்படி,
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவிடம் அது கேட்டுக்கொண்டது.
அவ் அபிவிருத்திக்குழு,
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஆராய்ந்து மூன்று இடங்களை,
பொருளாதாரமையம் அமைக்கப் பொருத்தமான இடங்களெனச் சிபாரிசு செய்தது.
தாண்டிக்குளம், ஓமந்தை, தேக்கவத்தை என்பவையே,
அச்சபை சிபாரிசு செய்த இடங்களாம்.



இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.
இம் மூன்று இடங்களையும் சிபாரிசு செய்த,
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுவில்,
முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,
அரச அதிபர் எனப் பலரும் இருந்திருக்கின்றனர்.
முக்கியமாக இன்று ஓமந்தையே இதற்கு உகந்த இடம் என,
உறுதிபட உரைத்து மோதிநிற்கும் முதலமைச்சரும்,
முன்பு இம்மூன்று இடங்களையும் சிபாரிசு செய்த
கூட்டத்தில் ஒருவராய் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இதன் பின்னர் மத்திய அரசு அனுப்பிய ஆய்வுக்குழு ஒன்று,
நேரடியாக இம்மூன்று இடங்களுக்கும் விஜயம் செய்து,
வவுனியா நகரிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்குள்ளேயே
அம்மையம் அமைய வேண்டும் எனும் தமது நிலைப்பாட்டின் அடிப்படையில்
இம் மூன்று இடங்களில் பொருளாதார மையம் அமைக்க,
பொருத்தமான இடமெனத் தாண்டிக்குளத்தைத் தேர்வு செய்தது.
பிரச்சினை இங்குதான் ஆரம்பமானது.



நமது வடமாகாண விவசாய அமைச்சர்,
அரசின் இம்முடிவை எதிர்க்கத் தலைப்பட்டார்.
எதிர்ப்புக்காக அவர் சொன்ன காரணங்கள் மூன்று.
ரசாங்கம் சொன்ன இடம், விதை உற்பத்திப் பண்ணைக்கு உரியது. அவ்விடத்தை எடுத்தால் விதை உற்பத்தி பாதிக்கப்படும் என்பது முதற்காரணம்.
விதை உற்பத்திப் பண்ணையையொட்டியிருந்த விவசாயக் கல்லூரி பாதிப்படையும் என்பது அடுத்த காரணம்
சூழல் பாதிப்புறும் என்பது மூன்றாவது காரணம்.



இங்குதான் வேடிக்கை தொடங்கியது.
முன்னர் தாண்டிக்குளம் உட்பட்ட மூன்று இடங்களை அரசுக்கு சிபாரிசு செய்த
மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சரும்,
அக்குழுவின் உறுப்பினரான விவசாய அமைச்சரோடு இணைந்து
அரசுக்குத் தனது எதிர்ப்பை வெளியிடத் தொடங்கினார்.



சிபாரிசு செய்தவர்களில் நீங்களும் இருந்தீர்களே என்ற கேள்வி வந்தபோது,
முதலமைச்சரும் விவசாய அமைச்சரும்
அன்றைய கூட்டத்திற்கு வருகை தந்து
பின்னர் இடையில் தாம் சென்றுவிட்டதாய்ப் பதிலுரைத்தனர்.
இங்கும் கேள்விகள் எழவே செய்தன.
இன்று இத்துணைப் பிரச்சினைக்குரியதாய்க் கருதி மோதும்
இம்முக்கிய விடயம்பற்றி தீர்மானிக்கும் கூட்டத்தில்
முழுமையாய்க் கலந்துகொள்ளாமல் சென்றது ஏன்? என்பது முதற்கேள்வி.
அங்கனம் சென்றாலும் பின்னர் தம் கைக்கு வந்த கூட்ட அறிக்கையைப் பார்த்த பின்னேனும்.
இம்முடிவுபற்றி எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தது ஏன்? என்பது அடுத்த கேள்வி.
மொத்தத்தில் தலைவர்கள் தம் பொறுப்புக்களை
எத்தனை தூரம் அலட்சியம் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.



இவ்விடத்தில் பழைய வரலாறு ஒன்றை நினைவுகூர வேண்டியிருக்கிறது.
இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தபோது அமைக்கப்பட்ட
வடகிழக்கு மாகாண சபைக்கு எவரை முதலமைச்சராய் நியமிப்பது என,
புலிகளிடம் அப்போதைய அரசு அபிப்பிராயம் கேட்டது.
அவ்வேளை புலிகள், அப்பதவிக்கென சில பெயர்களைச் சிபாரிசு செய்தனர்.
அப்பெயர்களில் ஒன்றாய் இருந்த
அப்போதைய யாழ். மாநகரசபை ஆணையாளர் சி.வி.கே. சிவஞானத்தை,
அன்றைய ஜனபாதிபதி  ஜே.ஆர். ஜயவர்த்தனா முதலமைச்சராய் நியமிக்க,
அம்முடிவோடு முரண்பட்ட புலிகள்,
வேறொருவரை நியமிக்கவேண்டுமெனப் பின்னர் பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினர்.
அதன்பின் விளைந்த பெரும் பிரச்சினைகளுக்கு இவ்விடயமும் ஒரு காரணமாயிற்று.
இன்றும் அதேபோல்தான், சிபாரிசின்போது அலட்சியமாய் இருந்துவிட்டு
முடிவு வந்தபின் மோதி நிற்கின்றனர் நம் தலைவர்கள்.



தாண்டிக்குளம் வேண்டாமென்பதற்கு விவசாய அமைச்சர் சொன்ன காரணங்களை
எதிரணியினர் மறுத்து நிற்கின்றனர்.
அமைச்சர் கருத்தும் எதிரணியினரின் மறுப்பும் பின்வருமாறு அமைகின்றன.
அரசாங்கம் சொன்ன இடம் விதை உற்பத்திப் பண்ணைக்கு உரியது. அவ்விடத்தை எடுத்தால் விதை உற்பத்தி பாதிக்கப்படும் என்பது அமைச்சர் சொன்ன முதற்காரணம்.
இம்முதற் காரணம் பற்றிய எதிரணியினர் கூறும் இரண்டு பதிவுகள் சிந்திக்கவைக்கின்றன.
மகிந்த ஆட்சிக்காலத்தின்போது, இந்நெல் உற்பத்தி மையத்தின் ஒரு பகுதியை எடுத்து பஸ் நிலையம் அமைத்தார்கள்.  அப்போது, விவசாய அமைச்சரோ, மாகாண சபையோ  அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன் என அவர்கள் முதலில் கேள்வி எழுப்பி பின்னர், இந்த விதை உற்பத்திப் பண்ணையை புளியங்குளத்தில் உள்ள 200 ஏக்கர் காணிக்கு நகர விரிவாக்கத்திற்காய் மாற்றுவதென ஏற்கனவே நகர அபிவிருத்தி திணைக்களம், 2009 அரச வர்த்தமானியில் செய்தி வெளியிட்டிருக்கிறது.  இந்நிலையில் எப்படியோ இந்த விதை உற்பத்தி நிலையம் மாற்றப்படவேண்டி உள்ளதால், இவ்விடத்தில் பொருளாதார மையம் அமைவதால் பாதிப்பு வராது என்று அமைச்சருக்குப் பதிலுரைத்து நிற்கின்றனர்.
 
விதை உற்பத்திப் பண்ணையையொட்டியிருக்கும் விவசாயக் கல்லூரி பாதிப்படையும் என்பது அமைச்சர் சொல்லும் அடுத்த காரணம்
எதிரணியினர் இக்கருத்தையும் ஏற்க மறுக்கின்றனர்.  விவசாய மாணவர்களின் கல்லூரி இருப்பது இவ்வாராய்ச்சி மையத்தின் எதிர்ப்பக்கத்திலேயே. இம்மாணவர்கள் தம் கல்விமுயற்சிக்கு இவ்விதையுற்பத்திப் பண்ணையை நம்பியிருக்கவில்லை. எனவே, மாணவரின் கல்விக்கு இப்பொருளாதார மையத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் அவர்கள்.
 
சூழல் பாதிப்புறும் என்பது அமைச்சர் சொல்லும் மூன்றாவது காரணம் இப்பொருளாதார மையத்தினால் ஏற்படும் கழிவுப்பொருட்களும், கழிவு நீரும் சூழலை பாதிக்கும் என்கிறார் அமைச்சர். 
அக்கருத்துக்கு எதிரணியினரிடமிருந்து வலிமையான பதில் வந்ததாய்த் தெரியவில்லை.  ஆனால், அவர்கள் ஒரு நகர உருவாக்கத்தில் இத்தகைய பிரச்சினைகள் வருவது இயற்கையே. இப்பிரச்சினைகளைத் தீர்க்க வழி கண்டு பிடிக்கவேண்டுமே தவிர, இவற்றைக்கண்டு பின் வாங்குதல் கூடாது என்று உரைத்து நிற்கின்றனர்.  அதுமட்டுமன்றி, இதே பிரச்சினை ஓமந்தையில்கூட வரும்தானே என்பதும் அவர் வாதமாய் இருக்கிறது.
 


தாண்டிக்குளமோ? ஓமந்தையோ?
எங்கேனும் அப் பொருளாதார மையம் அமைந்துவிட்டுப்போகட்டும்.
வடக்குக்குள் அதை அமையவிட்டால் சரிதான்.
ஆராயவேண்டிய பிரச்சினை வேறு.
தலைவர்கள் மத்தியில் ஏற்பட்ட இக்குழப்பங்களால்,
வன்னி மாவட்டத்தில் ஓமந்தை, தாண்டிக்குளம் என
இரண்டு பிரிவுகள் உருவாகியிருக்கின்றன.
தலைவர்களில்,
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும்,
முதலமைச்சரும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும்
மாகாண சபை உறுப்பினர்களான இந்திரராஜா, தியாகராஜா ஆகியோரும்
ஓமந்தை அணிக்காய் வாதிட்டு நிற்கின்றனர்.
அதுபோலவே, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகனும், மாவை சேனாதிராஜாவும்,
சபை முதல்வர் சி.வி.கே. சிவஞானமும்,
சுகாதார அமைச்சர் சத்தியலிங்கமும்
தாண்டிக்குளம் அணிக்காய் வாதிட்டு நிற்கின்றனர்.
இவ்விரு குழுக்களின் பின்னால்,
ஒன்றுபட்டு இருந்த வன்னி மாவட்ட மக்கள்
இவ்விரண்டு அணிகள் சார்ந்து கட்சி பிரிந்து
உண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் நடத்தி நிற்பதுதான்
வருத்தத்திற்குரிய செய்தி.



இப்பிரச்சினைகளுக்கு முடிவு காண முடியாத நிலையில்,
சென்ற மாதமளவில் மாகாண சபையில் இப்பிரச்சினை பற்றி ஆராயப்பட்டது.
அப்போது முதலமைச்சரின் கருத்தை மீறி ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
தாண்டிக்குளத்தில்தான் அம்மையம் அமையவேண்டுமென
ஒரு பிரேரணையை நிறைவேற்றினர்.



வழமைபோலவே,
முதலமைச்சர் தனது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் எண்ணி,
மாகாண சபை உறுப்பினர்களின் கருத்தை
தான் ஏற்கவேண்டும் எனும் கட்டாயம் இல்லை எனக் கருத்துரைத்து,
மாகாண சபை உறுப்பினர்களின் பிரேரணையை நிராகரித்தார்.
அதன்போது, மாகாண சபை முதல்வர் சி.வி.கே. சிவஞானம்,
சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை நிராகரிக்கும் உரிமை
முதலமைச்சருக்கு இல்லை என அறிக்கை விட
ஆளுங்கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்க்கட்சி அழகாய் உருவாயிற்று.



இந்நிலையில் முதலமைச்சர்
திடீரென ஒரு புதிய பாதை வகுத்தார்.
ஓமந்தையிலும் இல்லாமல், தாண்டிக்குளத்திலும் இல்லாமல்
தேக்கவத்தையில் இப்பொருளாதார மையத்தை அமைக்கலாமெனவும்,
அதற்கு, ஏற்கனவே அமைச்சர் ரிச்சாட் பதியுதீன் அவர்களால்
சில வருடங்களுக்கு முன் ஒரு தனியார் நிறுவனத்திற்கு
குத்தகைக்கு வழங்கப்பெற்ற நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும்
ஓர் புதிய திட்டத்தை அறிவித்தார்.
முதலமைச்சரின் அத்திட்டத்தை மத்திய அமைச்சரவை நிராகரித்தது.



அதன் பின்னர்தான்,
பிரச்சினை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கொண்டு வரப்பட்டது.
இதற்காகக் கூட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்
சம்பந்தன் இப்பிரச்சினை பற்றி ஆராய்ந்து,
பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தறிய முற்பட்டதாகவும்,
அக்கருத்துக் கணிப்பிலும் தாண்டிக்குளம் அணியே வெற்றி பெற்றதாகவும் செய்திகள் கசிந்தன.



அதன்பின்னர்,
இவ்விடயம் பற்றிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைப்பது போதாது.
மாகாண சபை உறுப்பினர்களின் கருத்தும் அறியப்படவேண்டும் என பிரச்சினை கிளம்ப,
அக்கருத்தறியும் பொறுப்பை மீண்டும் சம்பந்தர் முதலமைச்சரிடமே ஒப்படைத்தார்.
முதலமைச்சர் ஒரு வாக்குச் சீட்டினைத் தயாரித்து,
பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு அனுப்பி,
இவ்விடயம்பற்றிக் கருத்துக் கேட்டார்.
அக்கருத்துக்கணிப்பில் முதலமைச்சருக்கு ஆதரவாக
18 மாகாண சபை உறுப்பினர்களும், 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனராம்.
தாண்டிக்குள அணிக்கு 5 பேர் மட்டுமே வாக்களித்தனராம்.
இக்கருத்துக்கணிப்பில் 15 பேர் நடுநிலை வகித்ததுதான் வேடிக்கை.
இப்பதினைந்துபேரும் என்ன சொல்ல நினைந்தார்கள்?
யார் செத்தால் நமக்கென்ன என்பதுதான் அவர்கள் நிலையா?
அல்லது நிச்சயமாய் உடையப்போகும் கட்சியில்
பிற்காலத்தில் எவரின் கை ஓங்குகிறதோ அவரோடு இணைந்துகொள்ளலாம்
அதுவரை மௌனம் காப்பதுதான் நல்லதென அவர்கள் நினைக்கிறார்களா?
என்பதாய்க் கேள்விகள் பிறக்கின்றன.
இவ்விடயத்தில் நடுநிலை என்பதற்கான அர்த்தத்தை
அவர்கள்தான் சொல்லவேண்டும்.
நல்..ல்..ல்..ல்..ல தலைவர்கள்.



இதற்கிடையில், இது வன்னி மாவட்டம் சார்ந்த பிரச்சினை.
இதில் கருத்துரைக்க, மற்றைய மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ,
மாகாண சபை உறுப்பினர்களுக்கோ உரிமை இல்லை.
வன்னி மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள்தான்
இவ்விடயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று,
மத்திய அமைச்சரவை அறிவித்திருப்பதாய்ப் புதிய செய்தி வந்திருக்கிறது.



இதற்கிடையில் மத்திய அரசு,
இது தமது திட்டம்.
இதில் எவரது அபிப்பிராயத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கமுடியாது.
இந்த விடயத்தில் நாமே முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளதாயும் தெரிகிறது.



இது ஒரு மிகச்சிறிய பிரச்சினை.
தேவையில்லாமல் நம் தலைவர்கள்
மூட்டைப்பூச்சிக்கு துவக்கெடுத்து நிற்கின்றனர்.
இச்சிறு பிரச்சினைக்குக்கூட ஒன்றுபட்டு தீர்வுகாண முடியாமல் தத்தளித்து நிற்கும்
ஆளுங்கட்சியினரின் நிலையைக்காண பரிதாபமாய் இருக்கிறது.
இவர்கள்தான் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கப்போகிறார்களாம்.
உருப்பட்டமாதிரித்தான்!



பூனைகளின் சண்டையில்
தற்போது குரங்கின் கையில் அப்பம்.
இனியென்ன,
பூனைகளுக்கு மிஞ்சப்போவது ஒன்றுமில்லை.
அதன்பின்னர்???
இருக்கவே இருக்கிறது, பூனைகளுக்கான இன ஒப்பாரி.
நாமும் அவ் ஒப்பாரியோடு இணைந்து ஓலமிட
இப்போதே தயாராவோம்.



இலக்கியவாதிகளுக்கு ஏன் அரசியல் என்று சிலர் கேட்கிறார்கள்.
ஒரு சின்ன விடயத்தில்கூட
நம்மினம், நம் பிரதேசம் என்று ஒற்றுமை காட்ட முடியாமல்,
நமக்குள் வேற்றுமை வளர்த்து,
நம்கைக்கு வரவேண்டிய அதிகாரங்களை
நம் தலைவர்களே, எதிரிகளின் கைகளில் சேர்ப்பிக்கிறார்கள்.
ஒன்றுபட்டிருக்கவேண்டிய கட்டாய சூழ்நிலையில்,
சிந்தனையற்ற அறிவித்தல்கள்,
தீராத்தெளிவுகள்,
தெளிந்தவவற்றில் ஐயுறவு,
வீண்பிடிவாதம்,
ஆணவ முனைப்பு என
தம் தவறுகளால் பிரிவினை வளர்த்து,
தாமும் பிரிந்து, மக்களையும் பிரிவுபடுத்தும் இத்தலைவர்களை
இலக்கியவாதிகள் அன்றி வேறுயார்தான் கேட்பதாம்.
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.